| சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் | 
| பன்னிரெண்டாம் திருமுறை | 
| முதற் காண்டம் | 
| 5. திருநின்ற சருக்கம் | 
| 5.1 திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் | 
1271 
திரு நாவுக்கு அரசர் வளர் திருத் தொண்டின் நெறி வாழ 
வரு ஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மை திகழ் 
பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன் பேர் உலகில் 
ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன். | 
1 | 
1272 
தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றித் துகள் இல்லா 
நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கிச் 
சென்னி மதி புனையவளர் மணி மாடச் செழும் பதிகள் 
மன்னி நிறைந்து உளது திரு முனைப்பாடி வளநாடு. | 
2 | 
1273 
புனப் பண்ணை மணியினோடும் புறவின் நறும் புதுமலரின் 
கனப்பெண்ணில் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டேர் 
இனப் பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும் 
வனப்பெண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும். | 
3 | 
1274 
காலெல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன் 
பாலெல்லாம் கதிர்ச் சாலி பரப்பு எல்லாம் குலைக் கமுகு 
சாலெல்லாம் தரள நிரை தடம் எல்லாம் செங்கழுநீர் 
மேலெல்லா ம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை. | 
4 | 
1275 
கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு 
இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன் 
புடை பரந்து ஞிமிறொலிப்பப் புதுப் புனல் போல் மடை உடைப்ப 
உடை மடையக் கரும்படு கட்டியின் அடைப்ப ஊர்கள் தொறும். | 
5 | 
1276 
கரும் கதலிப் பெருங்குலைகள் களிற்றுக் கைம் முகம் காட்ட 
மருங்கு வளர் கதிர்ச் செந்நெல் வயப் புரவி முகம் காட்டப் 
பெருஞ்சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பொலி பிறங்க 
நெருங்கிய சாதுரங்க பல நிகர்பனவாம் நிறை மருதம். | 
6 | 
1277 
நறையாற்றுங் கமுகு நவ மணிக் கழுத்தின் உடன் கூந்தல் 
பொறை ஆற்றா மகளிர் எனப் புறம்பு அலை தண்டலை வேலித் 
துறை ஆற்ற மணி வண்ணச் சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை 
நிறை ஆற்று நீர்க் கொழுந்து படர்ந்தேறும் நிலைமையதால். | 
7 | 
1278 
மரு மேவு மலர் மேய மா கடலினுட் படியும் 
உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல் 
வரு மேனிச் செங்கண் வரால் மட முட்டப் பால் சொரியும் 
கரு மேதி தனைக் கொண்டு கரை புரள்வ திரை வாவி. | 
8 | 
1279 
மொய்யளி சூழ் நிரைநீல முழு வலயங்களின் அலையச் 
செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப 
மெய்யொளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை 
வைய மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர்ச் சோலை. | 
9 | 
1280 
எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல் 
பயிர்க் கண்வியல் இடங்கள் பல பரந்து உயர் நெற் கூடுகளும் 
வெயில் கதிர்மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி 
மயில் குலமும் முகல் குலமும் மாறாட மருங்கு ஆடும். | 
10 | 
1281 
மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி 
அறம் தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும் 
பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில் 
சிறந்த திருமுனைப் பாடித் திறம் பாடும் சீர்ப் பாடு. | 
11 | 
1282 
இவ் வகைய திரு நாட்டில் எனைப் பல ஊர்களும் என்றும் 
மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள் 
சைவ நெறி ஏழ் உலகும் பாலிக்கும் தன்மையினால் 
தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர் திருவாமூர். | 
12 | 
1283 
ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை 
ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணிக் காஞ்சி 
ஓங்குவன மாட நிரை ஒழுகுவன வழுவில் அறம் 
நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள். | 
13 | 
1284 
மலர் நீலம் வயல் காட்டும் மைஞ் ஞீலம் மதி காட்டும் 
அலர் நீடு மறு காட்டும் அணி ஊசல் பல காட்டும் 
புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும் 
கல நீடு மனை காட்டும் கரை காட்டாப் பெருவளங்கள். | 
14 | 
1285 
தலத்தின் கண் விளங்கிய அத் தனிப் பதியில் அனைத்து வித 
நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண் 
விலங்கின் மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலைவேளாண் 
குலத்தின் கண் வரும் பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும். | 
15 | 
1286 
அக் குடியின் மேல் தோன்றலாய பெரும் தன்மையினார் 
மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார் 
ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார் 
திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார். | 
16 | 
1287 
புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின் கண் 
மகிழவரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில் 
நிகழும் மலர்ச் செங்கமல நிரை இதழின் அகவயினில் 
திகழ வருந் திரு அனைய திலகவதியார் பிறந்தார். | 
17 | 
1288 
திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின் 
அலகில் கலைத் துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறிவாழ 
உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின் 
மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார். | 
18 | 
1289 
மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர்ப் புகனார் 
காதலனார் உதித்த தற்பின் கடன் முறைமை மங்கலங்கள் 
மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன் 
ஏதமில் பல் கிளை போற்ற இளங் குழவிப் பதம் கடந்தார். | 
19 | 
1290 
மருள் நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மணவினையும் 
தெருண் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்பச் செய்து அதற்பின் 
பொருள் நீத்தம் கொள வீசிப் புலன் கொளுவ மன முகிழ்த்த 
சுருள் நீக்கி மலர் விக்கும் கலை பயிலத் தொடங்கு வித்தார். | 
20 | 
1291 
தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால் 
சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம் 
முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை 
மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர் கின்றார். | 
21 | 
1292 
அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு இரண்டின் 
முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடித் தலைவர் 
மின்னார் செஞ்சடை அண்ணல் மெய் அடிமை விருப்புடையார் 
பொன்னாரும் மணி மௌலிப் புரவலன் பால் அருள் உடையார். | 
22 | 
1293 
ஆண் தகைமைத் தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார் 
காண் தகைய பெருவனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார் 
பூண்ட கொடைப் புகழனார் பால் பொருவின் மகள் கொள்ள 
வேண்டி எழுங் காதலினால் மேலோரைச் செலவிட்டார். | 
23 | 
1294 
அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு அவர்க்கு 
மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக் 
குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார் 
பணம் கொள் அரவு அகல் அல்குல் பைந் தொடியை மணம் நேர்ந்தார். | 
24 | 
1295 
கன்னித் திருத் தாதையார் மணம் இசைவு கலிப்பகையார் 
முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை வினை முடிப்பதன் முன் 
மன்னவற்கு வடபுலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர்மேல் 
அன்னவர்க்கு விடை கொடுத்தான் அவ்வினை மேல் அவர் அகன்றார். | 
25 | 
1296 
வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெஞ்சமத்தில் விடை கொண்டு 
போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில் 
காய்ந்த சினப் பகைப் புலத்தைக் கலந்து கடும் சமர்க் கடலை 
நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர்த் துறை விளைத்தார். | 
26 | 
1297 
ஆய நாள் இடை இப்பால் அணங்கு அனையாள் தனைப் பயந்த 
தூயகுலப் புகழனார் தொன்று தொடு நிலையாமை 
மேய வினைப் பயத்தாலே இவ் உலகை விட்டு அகலத் 
தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார். | 
27 | 
1298 
மற்றவர் தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார் 
சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்துப் 
பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும் 
கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார். | 
28 | 
1299 
தாதையாரும் பயந்த தாயாரும் இறந்த அதன் பின் 
மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்த 
காதலனார் மருண் நீக்கியாரும் மனக் கவலையினால் 
பேது உறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார். | 
29 | 
1300 
ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்றத் துயர் ஒழிந்து 
பெரு வானம் அடைந்தவர்க்குச் செய் கடன்கள் பெருக்கினார் 
மருவார்மேல் மன்னவற்காய் மலையப் போம் கலிப்பகையார் 
பொருவாரும் போர்க் களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார். | 
30 | 
1301 
வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவப் போய் 
அம் முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்குத் 
தம் உடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்றச் 
செம்மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார். | 
31 | 
1302 
எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனக் கொடுக்க இசைந்தார்கள் 
அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால் 
இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் எனத் துணிய 
வந்தவர் தம் அடி இணை மேல் மருண் நீக்கியார் விழுந்தார். | 
32 | 
1303 
அந் நிலையில் மிகப் புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற 
பின்னையும் நான் உமை வணங்கப் பெறுதலின் உயிர் தரித்தேன் 
என்னை இனித் தனிக் கைவிட்டு ஏகுவீர் எனில் யானும் 
முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார். | 
33 | 
1304 
தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா 
உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி 
அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி 
இம்பர் மனைத் தவம் புரிந்து திலகவதியார் இருந்தார். | 
34 | 
1305 
மாசின் மனத் துயர் ஒழிய மருண் நீக்கியார் நிரம்பித் 
தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வார் ஆய்க் 
காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்துக் கருணையினால் 
ஆசில் அறச் சாலைகளும் தண்ணீர்ப் பந்தரும் அமைப்பார். | 
35 | 
1306 
கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல் 
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும் 
நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர் 
யாவர்க்கும் தவிராத ஈகை வினைத் துறை நின்றார். | 
36 | 
1307 
நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை 
அல்லேன் என்று அறத் துறந்து சமயங்களான வற்றின் 
நல்ல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாமை யினால் 
கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார். | 
37 | 
1308 
பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி 
மாடணைந்தார் வல்லமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்கு 
வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன் 
கூடவரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார். | 
38 | 
1309 
அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம் 
பொங்கும் உணர்வுறப் பயின்றே அந் நெறியில் புலன் சிறப்பத் 
துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்குத் 
தங்களில்ன் மேலாம் தரும சேனர் எனும் பெயர் கொடுத்தார். | 
39 | 
1310 
அத்துறையின் மீக் கூரும் அமைதியினால் அகல் இடத்தில் 
சித்த நிலை அறியாதாரையும் வாதின் கண் 
உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய 
வித்தகராய் அமண் சமயத் தலைமையினில் மேம் பட்டார். | 
40 | 
1311 
அந் நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவச் 
செந்நெறியின் வைகும் திலகவதியார் தாமும் 
தொன்னெறியின் சுற்றத் தொடர்பு ஒழியத் தூய சிவ 
நன்னெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார். | 
41 | 
1312 
பேராத பாசப் பிணிப்பு ஒழியப் பிஞ்ஞகன் பால் 
ஆராத அன்பு பெற ஆதரித்த அம் மடவார் 
நீரார் கெடில வட நீள் கரையில் நீடு பெரும் 
சீரார் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார். | 
42 | 
1313 
சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவளக் 
குன்றை அடி பணிந்து கோதில் சிவ சின்னம் 
அன்று முதல் தாங்கி ஆர்வம் உறத் தம் கையால் 
துன்று திருப் பணிகள் செய்யத் தொடங்கினார். | 
43 | 
1314 
புலர்வதன் முன் திருவலகு பணி மாறிப் புனி அகன்ற 
நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு 
மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்துப் 
பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார். | 
44 | 
1315 
நாளும் மிகும் பணி செய்து குறைந்து அடையும் நன்னாளில் 
கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார் 
கோளுறு தீவினை முந்தப் பர சமயம் குறித்து அதற்கு 
மூளும் மனக் கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து. | 
45 | 
1316 
தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியைத் தொழுது என்னை 
ஆண்டு அருளும் நீராகில் அடியேன் பின் வந்தவனை 
ஈண்டு வினைப் பர சமயக் குழி நின்றும் எடுத்து ஆள 
வேண்டும் எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தனரால். | 
46 | 
1317 
தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும் 
அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் எனச் 
சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவப் 
பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார். | 
47 | 
1318 
மன்னு தபோ தனியார்க்குக் கனவின் கண் மழ விடையார் 
உன்னுடைய மனக் கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான் 
முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான் 
அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வான் என அருளி. | 
48 | 
1319 
பண்டு புரி நல் தவத்துப் பழுதின் அளவில் இறை வழுவும் 
தொண்டரை ஆளத் தொடங்கும் சூலை வேதனை தன்னைக் 
கண் தரு நெற்றியர் அருளக் கடும் கனல் போல் அடும் கொடிய 
மண்டு பெரும் சூலை அவர் வயிற்றின் இடைப் புக்கதால். | 
49 | 
1320 
அடைவில் அமண் புரி தரும சேனர் வயிற்று அடையும் அது 
வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம் 
கொடிய எலாம் ஒன்றாகும் எனக் குடரின் அகம் குடையப் 
படர் உழந்து நடுங்கி அமண் பாழியறை இடை விழுந்தார். | 
50 | 
1321 
அச் சமயத்து இடைத் தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும் 
விச்சைகளால் தடுத்திடவும் மேல் மேலும் மிக முடுகி 
உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர் தாம் 
நச்சரவின் விடம் தலைக் கொண்டு என மயங்கி நவையுற்றார். | 
51 | 
1322 
அவர் நிலைமை கண்ட அதற்பின் அமண் கையர் பலர் ஈண்டிக் 
கவர் கின்ற விடம் போல் முன் கண்டு அறியாக் கொடும் சூலை 
இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார் 
தவம் என்று வினைப் பெருக்கிச் சார்பு அல்லா நெறிசார்வார். | 
52 | 
1323 
புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது 
குண்டிகை நீர் மந்திரித்துக் குடிப்பித்தும் தணியாமை 
கண்டு மிகப் பீலி கொடு கால் அளவும் தடவி இடவும் 
பண்டையினும் நோவு மிகப் பரிபவத்தால் இடர் உழந்தார். | 
53 | 
1324 
தாவாத புகழ்த் தரும சேனருக்கு வந்த பிணி 
ஓவாது நின்று இடலும் ஒழியாமை உணர்ந்தாராய் 
ஆ! ஆ! நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய்ப் 
போவார்கள் இது நம்மால் போக்க அரிதாம் எனப் புகன்று. | 
54 | 
1325 
குண்டர்களும் கை விட்டார் கொடும் சூலை மிசைக் கொண்டு 
மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதி மயங்கிப் 
பண்டை உறவு உணர்ந்தார்க்குத் திலகவதியார் உளராகக் 
கொண்டு அவர்பால் ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்பு உணர்த்த. | 
55 | 
1326 
ஆங்கு அவன் போய்த் திருவதிகை தணை அடைய அரும் தவத்தார் 
பூங்கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணையக் கண்டு இறைஞ்சி 
ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது எனத் 
தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான். | 
56 | 
1327 
கொல்லாது சூலை நோய் குடர் முடக்கித் தீராமை 
எல்லாரும் கை விட்டார் இது செயல் என் முன் பிறந்த 
நல்லாள் பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு 
அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான். | 
57 | 
1328 
என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து 
நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம் 
சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய 
அன்று அவனும் மீண்டு போய்ப் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான். | 
58 | 
1329 
அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான் 
எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால் 
ஒவ்வா இப் புன் சமயத்து ஒழியா இத்துயர் ஒழியச் 
செவ்வாறு சேர் திலக வதியார் தாள் சேர்வன் என. | 
59 | 
1330 
எடுத்த மனக் கருத்து உய்ய எழுதலால் எழு முயற்சி 
அடுத்தலுமே அயர்வு ஒதுங்கத் திருவதிகை அணைவதனுக்கு 
உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழியத் 
தொடுத்த பீலியும் ஒழியப் போவதற்குத் துணிந்து எழுந்தார். | 
60 | 
1331 
பொய் தரும் மால் உள்ளத்துப் புன் சமணர் இடம் கழிந்து 
மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து 
கை தருவார் தமை ஊன்றிக் காணாமே இரவின் கண் 
செய் தவ மாதவர் வாழும் திருவதிகை சென்று அடைவார். | 
61 | 
1332 
சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடரக் 
குலவி எழும் பெருவிருப்புக் கொண்டு அணையக் குலவரை போன்று 
இலகு மணி மதில் சோதி எதிர் கொள் திருவதிகையினில் 
திலக வதியார் இருந்த திரு மடத்தைச் சென்று அணைந்தார். | 
62 | 
1333 
வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உற வணங்கி 
நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர் 
இந்த உடல் கொடும் சூலைக் கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது 
உய்ந்து கரை ஏறுநெறி உரைத்து அருளும் என உரைத்து. | 
63 | 
1334 
தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார் தமை நோக்கி 
ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கை தொழுது 
கோளில் பரசமய நெறிக் குழியில் விழுந்து அறியாது 
மூளும் அரும் துயர் உழந்தீர்! எழுந்தீர்! என மொழிந்தார். | 
64 | 
1335 
மற்ற வுரை கேட்டலும் ஏ மருண் நீக்கியார் தாமும் 
உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர் 
கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர் 
பற்று அறுப்பார் தமைப் பணிந்து பணி செய்வீர் எனப் பணித்தார். | 
65 | 
1336 
என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்ச 
நின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்து 
சென்று திரு வீரட்டம் புகுவதற்குத் திருக் கயிலைக் 
குன்று உடையார் திரு நீற்றை அஞ்சு எழுத்து ஓதிக் கொடுத்தார். | 
66 | 
1337 
திரு வாளன் திரு நீறு திலகவதியார் அளிப்ப 
பெரு வாழ்வு வந்தது எனப் பெருந்தகையார் பணிந்து ஏற்ற அங்கு 
உருவார அணிந்து தமக்குற்ற இடத்து உய்யும் நெறி 
தருவாராய்த் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார். | 
67 | 
1338 
நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும் 
மாற வரும் திருப் பள்ளி எழுச்சியினில் மாதவம் செய் 
சீர் அடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு 
ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரைக் கொடு புக்கார். | 
68 | 
1339 
திரைக் கெடில வீரட்டானத்து இருந்த செங்கனக 
வரைச் சிலையார் பெரும் கோயில் தொழுது வலம் கொண்டு இறைஞ்சித் 
தரைத் தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திரு அருளால் 
உரைத் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார். | 
69 | 
1340 
நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் 
    நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக 
மாற்றார் புரம் மாற்றிய வேதியரை 
    மருளும் பிணி மாயை அறுத்திடுவான் 
கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என 
    நீடிய கோதில் திருப்பதிகம் 
போற்றால் உலகு ஏழின் வரும் துயரம் 
    போமாறு எதிர் நின்று புகன்றனரால். | 
70 | 
1341 
மன்னும் பதிகம் அது பாடியபின் 
    வயிறு உற்று அடு சூலை மறப்பிணிதான் 
அந் நின்ற நிலைக் கண் அகன்றிடலும் 
    அடியேன் உயிரோடு அருள் தந்தது எனாச் 
செந் நின்ற பரம் பொருள் ஆனவர் தம் 
    திருவாரருள் பெற்ற சிறப்பு உடையோர் 
முன் நின்ற தெருட்சி மருட்சியினால் 
    முதல்வன் கருணைக் கடல் மூழ்கினாரே. | 
71 | 
1342 
அங்கங்கள் அடங்க உரோமம் எலாம்  
    அடையப் புளகம் கண் முகிழ்த்து அலரப் 
பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழியப்  
    புவி மீது விழுந்து புரண்டு அயர்வார் 
இங்கு என் செயல் உற்ற பிழைப்பு 
    அதனால் ஏறாத பெருந்திடர் ஏறிட நின் 
தங்கும் கருணைப் பெரு வெள்ளம் 
    இடத் தகுமோ என இன்னன தாம் மொழிவார். | 
72 | 
1343 
பொய் வாய்மை பெருக்கிய புன் 
    சமயப் பொறியில் சமண் நீசர் புறத் துறையாம் 
அவ்வாழ் குழியின் கண் விழுந்து 
    எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன் 
மை வாச நறும் குழல் மா மலையாள் 
    மணவாளன் மலர்க்கழல் வந்து அடையும் 
இவ் வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு 
    எதிர்செய் குறை என் கொல் எனத் தொழுவார். | 
73 | 
1344 
மேவுற்ற இவ் வேலையில் 
    நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால் 
பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வளப் 
    பதிகத் தொடைபாடிய பான்மையினால் 
நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் 
    நின் நன்நாமம் நயப்புற மன்னுக என்று 
யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் 
    இடையே ஒருவாய்மை எழுந்ததுவே. | 
74 | 
1345 
இத்தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு 
    இறை ஆகிய அன்பரும் இந் நெடுநாள் 
சித்தம் திகழ் தீவினையேன் அடையும் 
    திருவோ இது என்று தெருண்டு அறியா 
அத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு 
    அருளும் கருணைத் திறமான அதன் 
மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே 
    மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே. | 
75 | 
1346 
பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி 
    புன் தலையோர் நெறி பாழ்பட வந்து 
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா 
    அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான் 
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் 
    முழவம் கிளை துந்துபி கண்டை உடன் 
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் 
    நெடு மா கடல் என்ன நிறைந்துளதே. | 
76 | 
1347 
மையல் துறை ஏறி மகிழ்ந்து 
    அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன் 
மெய் உற்ற திருப்பணி செய்பவராய் 
    விரவும் சிவ சின்னம் விளங்கிடவே 
எய்துற்ற தியானம் அறா உணர்வும் 
    ஈறு இன்றி எழும் திருவாசகமும் 
கையில் திகழும் உழவாரமுடன் கைக் 
    கொண்டு கலந்து கசிந்தனரே. | 
77 | 
1348 
மெய்ம்மைப் பணி செய்த விருப்பு 
    அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில் 
தம் இச்சை நிரம்ப வரம் பெறும் 
    அத் தன்மைப் பதி மேவியதா பதியார் 
பொய்மைச் சமயப் பிணி விட்டவர் 
    முன் போதும் பிணி விட்டருளிப் பொருளா 
எம்மைப் பணிகொள் கருணைத் திறம் 
    இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே. | 
78 | 
1349 
இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி 
மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கைய வண்ணம் 
பன்னு தொன்மையில் பாடலி புத்திர நகரில் 
புன்மை யே புரி அமணர் தாம் கேட்டு அது பொறாராய். | 
79 | 
1350 
தரும சேனர்க்கு வந்த அத் தடுப்ப அரும் சூலை 
ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்யப் போய்ப் 
பெருகு சைவராய்ப் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார் 
மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார். | 
80 | 
1351 
மலையும் பல் சமயங்களும் வென்று மற்றவரால் 
நிலையும் பெற்ற இந்நெறி இனி அழிந்தது என்று அழுங்கிக் 
கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர் 
தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார். | 
81 | 
1352 
இவ்வகைப் பல அமணர்கள் துயருன் ஈண்டி 
மெய் வகைத் திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு 
சைவனாகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம் 
செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார். | 
82 | 
1353 
தவ்வை கைவத்து நிற்றலின் தரும சேனரும் தாம் 
பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்திலது எனப் போய் இங்கு 
எவ்வ மாக அங்கு எய்தி நம் சமய அங்கனமும் 
தெய்வ நிந்தையும் செய்தனர் எனச் சொலத் தெளிந்தார். | 
83 | 
1354 
சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர் 
முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே 
இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல 
மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார். | 
84 | 
1355 
உடை ஒழிந்து ஒரு பேச்சு இடை இன்றி நின்று உண்போர் 
கடை அணைந்தவன் வாயில் காவலருக்கு நாங்கள் 
அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்ன 
இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார். | 
85 | 
1356 
அடிகண்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து 
கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் எனக் கூற 
வடி நெடுவேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால் 
கடிது அணைவான் அவர்க்கு உற்றது என் கொல் எனக் கவன்று உரைத்தான். | 
86 | 
1357 
கடை காவல் உடையார்கள் புகுத விடக் காவலன் பால் 
நடை ஆடும் தொழில் உடையார் நண்ணித் தாம் எண்ணியவாறு 
உடையார் ஆகிய தரும சேனர் பிணி உற்றாராய்ச் 
சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார். | 
87 | 
1358 
விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து 
புரை உடைய மனத்தினராய் போவதற்குப் பொய்ப் பிணி கொண்டு 
உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழியப் பெறுவதே 
கரையில் தவத்தீர் இதனுக்கு என் செய்வது எனக் கனன்றான். | 
88 | 
1359 
தலை நெறி ஆகிய சமயம் தன்னை அழித்து உன்னுடைய 
நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறி இலியை 
அலை புரிவாய் எனப் பரவி வாயால் அஞ்சாது உரைத்தார் 
கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர். | 
89 | 
1360 
அருள் கொண்ட உணர்வு இன்றி நெறிகோடி அறிவென்று 
மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமை நோக்கித் 
தெருள் கொண்டோர் இவர் சொன்ன தீயோனைச் செறுவதற்குப் 
பொருள் கொண்டு விடாது என் பால் கொடுவாரும் எனப் புகன்றான். | 
90 | 
1361 
அரசனது பணிதலை நின்ற அமைச்சர்களும் அந்நிலையே 
முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து 
விரை செறியும் சோலை சூழ் திருவதிகை தனை மேவி 
பரசமயப் பற்று அறுத்த பான்மையினார் பால் சென்றார். | 
91 | 
1362 
சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து 
மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை 
இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என 
நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார். | 
92 | 
1363 
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்மறையின் 
கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடை யானைத் 
தேமாலைச் செந்தமிழின் செழும் திருத் தாண்டகம் பாடி 
ஆமாறு நீர் அழைக்கும் அடைவிலம் என்று அருள் செய்தார். | 
93 | 
1364 
ஆண்ட அரசருள் செய்யக் கேட்ட வரும் அடி வணங்கி 
வேண்டியவர்க் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர் 
ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார் 
மூண்ட சினப் போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார். | 
94 | 
1365 
பல்லவனும் அது கேட்டுப் பாங்கு இருந்த பாய் உடுக்கை 
வல் அமணர் தமை நோக்கி மற்று அவனைச் செய்வது இனிச் 
சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத 
புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இடப் புகன்றார். | 
95 | 
1366 
அருகு அணைந்தார் தமை நோக்கி அவ் வண்ணம் செய்க எனப் 
பெருகு சினக் கொடுங் கோலான் மொழிந்திடலும் பெருந் தகையை 
உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தித் 
திருகு கரும் தாள் கொளுவிச் சேமங்கள் செய்து அமைத்தார். | 
96 | 
1367 
ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்துத் 
தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலைத் தலைக் கொண்டே 
ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று 
மூண்டமனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார். | 
97 | 
1368 
வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம் 
தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர்த் தடம் போன்று 
மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய் 
ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே. | 
98 | 
1369 
மாசு இல் மதி நீடுபுனல் மன்னி வளர் சென்னியனைப் 
பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை 
ஈசனை எம்பெருமானை எவ் உயிரும் தருவானை 
ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார். | 
99 | 
1370 
ஓர் எழுநாள் கழிந்து அதன்பின் உணர்வில் அமணரை அழைத்துப் 
பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும் 
கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர் 
தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையைத் திறந்தார்கள். | 
100 | 
1371 
ஆனந்த வெள்ளத்தின் இடை மூழ்கி அம்பலவர் 
தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி 
ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார் தமைக் கண்டே 
ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார். | 
101 | 
1372 
அதிசயம் அன்றிது முன்னை அமண் சமயச் சாதகத்தால் 
இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து 
மதி செய்வது இனிக் கொடிய வல் விடம் ஊட்டுவது என்று 
முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள். | 
102 | 
1373 
ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடு மன்னன் 
ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்பத் 
தேங்காதார் திருநாவுக்கரையரை அத் தீய விடப் 
பாங்கு உடைய பால் அடிசில் அமுது செயப் பண்ணினார். | 
103 | 
1374 
நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று 
வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே 
செஞ்சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால் 
வெஞ்சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார். | 
104 | 
1375 
பொடி ஆர்க்கும் திருமேனிப் புனிதர்க்குப் புவனம்கள் 
முடிவாக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுதானால் 
படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம் உடைய 
அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ. | 
105 | 
1376 
அவ் விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப 
வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெருக் கொண்டே 
இவ் விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி எனத் 
தெவ் விடத்துச் செயல் புரியும் காவலற்குச் செப்புவார். | 
106 | 
1377 
நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர் 
தஞ்சமுடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான் 
எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும் 
துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார். | 
107 | 
1378 
மற்றவர் தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும் 
செற்ற அவனை இனிக் கடியும் திறம் எவ்வாறு எனச் செப்ப 
உற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின் 
கொற்ற வயக் களிற்று எதிரே விடுவது எனக் கூறினார். | 
108 | 
1379 
மா பாவிக் கடை அமணர் வாகீசத் திருவடியாம் 
கா பாலி அடியவர் பால் கடக் களிற்றை விடுக என்னப் 
பூ பாலர் செயல் மேற்கொள் புலைத் தொழிலோன் அவர் தம் மேல் 
கோ பாதி சயமான கொலைக் களிற்றை விடச் சொன்னான். | 
109 | 
1380 
கூடத்தைக் குத்தி ஒரு குன்றம் எனப் புறப்பட்டு 
மாடத்தை மறத்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றித் 
தாடத்தில் பரிக்காரர் தலை இடறிக் கடக் களிற்றின் 
வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம். | 
110 | 
1381 
பாசத் தொடை நிகளத் தொடர்பறியத் தறி முறியா 
மீ சுற்றிய பறவைக் குலம் வெருவத் துணிவிலகா 
ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறிப் பரி உழறா 
வாசக் கட மழை முற்பட மதவெற்பு எதிர் வருமால். | 
111 | 
1382 
இடி உற்று எழும் ஒலியில் திசை இப உட்கிட அடியில் 
படி புக்கு உற நெளியப் படர் பவனக் கதி விசையில் 
கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின் 
முடிவில் கனல் என முன் சினம் முடுகிக் கடுகியதே. | 
112 | 
1383 
மாடு உற்று அணை இவுளிக் குலம் மறியச் செறி வயிரக் 
கோடுற்று இரு பிளவிட்டு அறு குறை கைக்கொடு முறியச் 
சாடுற்றிடு மதில் தெற்றிகள் சரியப் புடை அணி செற்று 
ஆடுற்று அகல் வெளியுற்று அது அவ்வடர் கைக்குல வரையே. | 
113 | 
1384 
பாவக் கொடு வினை முற்றிய படிறுற்று அடு கொடியோர் 
நாவுக்கரசர் எதிர் முற்கொடு நணுகிக் கருவரை போல் 
ஏவிச் செறு பொருகைக் கரியினை உய்த்திட வெருளார் 
சேவிற்று திகழ்பவர் பொன் கழல் தெளிவு உற்றனர் பெரியோர். | 
114 | 
1385 
அண்ணல் அருந் தவ வேந்தர் ஆணை தம் மேல் வரக் கண்டு 
விண்ணவர் தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானைச் 
சுண்ண வெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப் பதிகத்தை 
மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார். | 
115 | 
1386 
வஞ்சகர் விட்ட சினப் போர் மதவெங் களிற்றினை நோக்கிச் 
செஞ்சடை நீள் முடிக் கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார் 
வெம்ஞ்சுடர் மூவிலைச் சுல வீரட்டர் தம் அடியோம் நாம் 
அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி உறைந்தார். | 
116 | 
1387 
தண் தமிழ் மாலைகள் பாடித் தம் பெருமான் சரணாகக் 
கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கைத் 
தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில் 
எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம். | 
117 | 
1388 
ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ் வேழம் பெயரத் 
தூண்டிய மேல் மறப் பாகர் தொடக்கி அடத்துத் திரிந்து 
மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி 
ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே. | 
118 | 
1389 
ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்துப் பிளந்து 
நாடிப் பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக 
நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல 
ஆடி அவ் யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே. | 
119 | 
1390 
யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம் 
மானம் அழிந்து மயங்கு வருந்திய சிந்தையர் ஆகித் 
தானை நில மன்னன் தாளில் தனித் தனி வீழ்ந்து புலம்ப 
மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனிச் செய்வது என் என்றான். | 
120 | 
1391 
நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால் 
எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ் வண்ணம் நின் சீர் 
பங்கப் படுத்தவன் போகப் பரிபவம் தீரும் உனக்குப் 
பொங்கழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார். | 
121 | 
1392 
அல்லிருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான் 
தொல்லைச் சமயம் அழித்துத் துயரம் விளைவித்தவன் தன்னைச் 
சொல்லும் இனிச் செய்வது என்னச் சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர் 
கல்லுடன் பாசம் பிணித்துக் கடல் இடைப் பாய்ச்சுவது என்றார். | 
122 | 
1393 
ஆங்கு அது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கித் 
தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் உறக் கொடு போகிப் 
பாங்கு ஒரு கல்லில் அணைத்துப் பாசம் பிணித்து ஓர் படகில் 
வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்துமின் என்று விடுத்தான். | 
123 | 
1394 
அவ் வினை செய்திடப் போகும் அவருடன் போயர் உகந்த 
வெவ்வினை யாளரும் சென்று மேவிட நாவுக்கரசர் 
செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார் 
பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அப்பாதகர். | 
124 | 
1395 
அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர் 
ஒப்பரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும் 
எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று 
செப்பிய வண் தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார். | 
125 | 
1396 
சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி 
நல் தமிழ் மாலை ஆம் நமச்சிவாய என்று 
அற்ற முன் காக்கும் அஞ்சு எழுத்தை அன்பொடு 
பற்றி உணர்வினால் பதிகம் பாடினார். | 
126 | 
1397 
பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால் 
அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு 
அரிய அஞ்சு எழுத்தையும் அரசு போற்றிடக் 
கரு நெடுங்கடலின் உட் கல் மிதந்ததே. | 
127 | 
1398 
அப் பெருங்கல்லும் அங்கு அரசு மேல் கொளத் 
தெப்ப மாய் மிதத்தலில் செறிந்த பாசமும் 
தப்பியது அதன் மிசை இருந்த தாவில் சீர் 
மெய்ப் பெரும் தொண்டனார் விளங்கித் தோன்றினார். | 
128 | 
1399 
இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் 
வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட 
அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல் 
ஒரு கல் மேல் ஏற்று இடல் உரைக்க வேண்டுமோ. | 
129 | 
1400 
அருள் நயந்து அஞ்செழுத்து ஏத்தப் பெற்ற அக் 
கருணை நாவரசினைத் திரைக் கரங்களால் 
தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட 
வருணனும் செய்தனன் முன்பு மா தவம். | 
130 | 
1401 
வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச் 
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட 
ஏந்தியே கொண்டு எழுந்து அருள் வித்தனன் 
பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில். | 
131 | 
1402 
அத் திருப் பதியினில் அணைந்த அன்பரை 
மெய்த் தவக் குழாம் எலாம் மேவி ஆர்த்தெழ 
எத் திசையைனும் அர என்னும் ஓசைபோல் 
தத்து நீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த்ததே. | 
132 | 
1403 
தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன் 
செழும் திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள் வெண் 
கொழுந்து அணி சடையாரைக் கும்பிட்டு அன்புற 
விழுந்து எழுந்து அருள் நெறி விளங்கப் பாடுவார். | 
133 | 
1404 
ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்துத் 
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங் கட்கு என்று 
வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எவ் உயிர்க்கும் 
சான்றாம் ஒருவனைத் தண் தமிழ் மாலைகள் சாத்தினாரே. | 
134 | 
1405 
மற்றும் இணையன வண் தமிழ் மாலைகள் பாடி வைகி 
வெற்றி மழவிடை வீரட்டர் பாதம் மிக நினைவால் 
உற்றதொர் காதலின் அங்கு நின்று ஏகி ஒன்னார் புரங்கள் 
செற்றவர் வாழும் திருவதிகைப் பதி சென்று அடைவார். | 
135 | 
1406 
தேவர் பிரான் திரு மாணிக் குழியும் தினை நகரும் 
மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சிப் 
பூவலர் சோலை மணமடி புல்லப் பொருள் மொழியின் 
காவலர் செல்வத் திருக் கெடிலத்தைக் கடந்து அணைந்தார். | 
136 | 
1407 
வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீயம் இறைகள் எல்லாம் 
எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்து அருள 
மஞ்சிவர் மாடத் திருவதிகைப் பதி வாணர் எல்லாம் 
தம் செயல் பொங்கத் தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார். | 
137 | 
1408 
மணி நெடுந் தோரணம் வண் குலைப் பூகம் மடற் கதலி 
இணையுற நாட்டி எழு நிலைக் கோபுரம் தெற்றி எங்கும் 
தணிவில் பெருகொளித் தாமங்கள் நாற்றிச் செஞ் சாந்து நீவி 
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார். | 
138 | 
1409 
மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார் 
இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்மப் 
பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும் 
தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர் கொண்டனர் தொண்டரையே. | 
139 | 
1410 
தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும் 
நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகிப் 
பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் செஞ் சொல் 
மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே. | 
140 | 
1411 
கண்டார்கள் கை தலைமேல் குவித்து இந்தக் கருணை கண்டால் 
மிண்டாய செங்கை அமண்கையர் தீங்கு விளைக்கச் செற்றம் 
உண்டாய்¢ன வண்ணம் எவ் வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும் 
தொண்டு ஆண்டு கொண்ட பிரானைத் தொழுது துதித்தனரே. | 
141 | 
1412 
இவ் வண்ணம் போல எனைப் பல மாக்கள் இயம்பி ஏத்த 
மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவிச் செல்ல 
அவ் வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம்பவளச் 
செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தைச் சேர்ந்தனரே. | 
142 | 
1413 
உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி 
நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே 
எம் பெருமான் தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று 
தம் பரிவால் திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார். | 
143 | 
1414 
அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை 
விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதைத் 
தெரிவரிய பெரும் தன்மைத் திருநாவுக் கரசு மனம் 
பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப் பணி செயும் நாள். | 
144 | 
1415 
புல் அறிவில் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து ஒழுகும் 
பல்லவனும் தன்னுடைய பழவினைப் பாசம் பறிய 
அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினைப் பணிந்து 
வல்லமணர் தமை நீத்து மழவிடையோன் தாள் அடைந்தான். | 
145 | 
1416 
வீடு அறியாச் சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த 
காடவனும் திருவதிகை நகரின் கண் கண் நுதற்குப் 
பாடலி புத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும் 
கூட இடித்துக் கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான். | 
146 | 
1417 
இந் நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு 
மன்னான வாகீசத் திருமுனியும் மதிச் சடைமேல் 
பன்னாகம் அணிந்தவர் தம் பதி பலவும் சென்று இறைஞ்சிச் 
சொன்னாமத் தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார். | 
147 | 
1418 
திருவதிகைப் பதி மருங்கு திரு வெண்ணெய் நல்லூரும் 
அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா 
மருவு திருப்பதி பிறவும் வணங்கி வளத் தமிழ் பாடிப் 
பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகிடம் அணைந்தார். | 
148 | 
1419 
கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும் 
சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி 
வார் சடையார் மன்னு திருத் தூங்கானை மாடத்தைப் 
பார் பரவும் திருமுனிவர் பணிந்து ஏத்திப் பரவினார். | 
149 | 
1420 
புன் நெறியாம் அமண் சமயத் தொடக்குண்டு போந்தவுடன் 
தன்னுடனே உயிர்வாழத் தரியேன் நான் தரிப்பதனுக்கு 
என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று 
பன்னு செழுந்தமிழ் மாலை முன் நின்று பாடுவார். | 
150 | 
1421 
பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து 
முன் ஆகி எப் பொருட்கும் முடிவாகி நின்றானைத் 
தன் ஆகத்து உமை பாகம் கொண்டானைச் சங்கரனை 
நல் நாமத் திருவிருத்தம் நலம் சிறக்கப் பாடுதலும். | 
151 | 
1422 
நீடு திருத் தூங்கானை மாடத்து நிலவு கின்ற 
ஆடக மேருச் சிலையான் அருளால் ஓர் சிவபூதம் 
மாடொருவர் அறியாமே வாகீசர் திருத் தோலில் 
சேடுயர் மூவிலைச் சூலம் சின விடையின் உடன் சாத்த. | 
152 | 
1423 
ஆங்கவர் தம் திருத் தோளில் ஆர்ந்த திரு இலச்சினையைத் 
தாம் கண்டு மனம் களித்துத் தம் பெருமான் அருள் நினைந்து 
தூங்கருவி கண் பொழியத் தொழுது விழுந்து ஆர்வத்தால் 
ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார். | 
153 | 
1424 
தூங்கானை மாடத்துச் சுடர்க் கொழுந்தின் அடிபரவிப் 
பாங்காகத் திருத் தொண்டு செய்து பயின்று அமரும் நாள் 
பூங்கானம் மணம் கமழும் பொருவில் திரு அரத் துறையும் 
தேங்காவின் முகில் உறங்கும் திருமுது குன்றமும் பணிந்து. | 
154 | 
1425 
வண்தமிழ் மென் மலர் மாலை புனைந்தருளி மருங்குள்ள 
தண் துறை நீர்ப் பதிகளிலும் தனி விடையார் மேவிடம் 
கொண்டருளும் தானங்கள் கும்பிட்டுக் குண திசை மேல் 
புண்டரிகத் தடம் சூழ்ந்த நிவாக் கரையே போதுவார். | 
155 | 
1426 
ஆனாத சீர்த் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற 
வானாறு புடை பரக்கும் மலர்ச் சடையார் அடி வணங்கி 
ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து 
தேனாரும் மலர்ச் சோலைத் திருப்புலியூர் மருங்கு அணைந்தார். | 
156 | 
1427 
நாவுக் கரசரும் இருவர்க்கு அரியவர் 
    நடம் ஆடிய திரு எல்லை பால் 
மேவித் தலம் உற மெய்யில் தொழுத 
    பின் மேல் மேல் எழுதரும் விரைவோடும் 
காவில் களி மயில் மகிழ் உற்று எதிர் 
    எதிர் ஆடக் கடி கமழ் கமலம் சூழ் 
வாவித் தடமலர் வதனம் பொலிவுறு 
    மருதத் தண்பணை வழி வந்தார். | 
157 | 
1428 
முருகில் செறி இதழ் முளரிப் 
    படுகரில் முது மேதிகள் புதுமலர் மேயும் 
அருகில் செறிவனம் என மிக்குயர் 
    கழை அளவில் பெருகிட வளர் இக்குப் 
பெருகிப் புடை முதிர் தரளம் சொரிவன 
    பெரியோர் அவர் திருவடிக் கண்டு 
உருகிப் பரிவுறு புனல் கண் பொழிவன 
    என முன்புள வயல் எங்கும். | 
158 | 
1429 
அறிவில் பெரியவர் அயல் நெல் பணை 
    வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார் 
பிறவிப் பகை நெறி விடுவீர் இருவினை 
    பெருகித் தொடர்பிணி உறுபாசம் 
பறிவுற்றிட அணையுமின் என்று இருபுடை 
    பயில் சூழ் சினை மிசை குயில் கூவும் 
செறிவில் பலதரு நிலையில் பொலிவுறு 
    திரு நந்தன வனம் எதிர் கண்டார். | 
159 | 
1430 
அவர் முன் பணிவொடு தொழுது அங்கு 
    அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும் 
தவம் முன் புரிதலில் வரு தொண்டு 
    எனும் நிலைதலை நின்று உயர் தமிழ் இறையோராம் 
இவர் தம் திருவடிவது கண்டு அதிசயம் 
    என வந்து எதிர் அரகர என்றே 
சிவ முன் பயில் மொழி பகர் கின்றன 
    வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை. | 
160 | 
1431 
அஞ்சொல் திருமறை அவர் முன் பகர்தலும் 
    அவரும் தொழுது முன் அளிகூரும் 
நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும் 
    நிறை அன்பொடும் உரை தடுமாறச் 
செஞ்சொல் திருமறை மொழி அந்தணர் 
    பயில் தில்லைத் திரு நகர் எல்லைப்பால் மஞ்சில் 
பொலி நெடு மதில் சூழ் குடதிசை
    மணி வாயில் புறம் வந்துற்றார். | 
161 | 
1432 
அல்லல் பவம் அற அருளும் தவ முதல் 
    அடியார் எதிர் கொள அவரோடும் 
மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் 
    வழிபுக்கு எதிர் தொழுது அணை உற்றார் 
கல்வித் துறை பல வரு மா மறை முதல் 
    கரை கண்டு உடையவர் கழல் பேணும் 
செல்வக் குடி நிறை நல் வைப்பு இடை 
    வளர் சிவமே நிலவிய திருவீதி. | 
162 | 
1433 
நவ மின் சுடர் மணி நெடு மாலையும் 
    நறு மலர் மாலையும் நிறை திருவீதிப் 
புவனங்களின் முதல் இமையோர் 
    தடமுடி பொருந்திய மணி போகட்டிப் 
பவனன் பணி செய வருணன் புனல் 
    கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று 
எவரும் தொழுது எழும் அடியார் திரு 
    அலகு இடுவார் குளிர்புனல் விடுவார்கள். | 
163 | 
1434 
மேலம் பரதலம் நிறையும் கொடிகளில் 
    விரி வெங்கதிர் நுழைவது அரிதாகும் 
கோலம் பெருகிய திருவீதியை முறை 
    குலவும் பெருமையர் பணிவுற்றே 
ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு 
    ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும் 
ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் 
    உறமெய் கொடு தொழுதுள்புக்கார். | 
164 | 
1435 
வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை 
    வலம் வந்து அலமரு வரை நில்லா 
அளவில் பெருகிய ஆர்வத்து இடை 
    எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும் 
புளகச் செறி நிரை விரவத் திருமலி 
    பொன் கோபுரம் அது புகுவார் முன் 
களனில் பொலிவிடம் உடையார் நடநவில் 
    கனகப் பொது எதிர் கண்ணுற்றார். | 
165 | 
1436 
நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி 
    நிறை அம்பலம் நினைவுற நேரே 
கூடும் படி வரும் அன்பால் இன்புறு 
    குணம் முன் பெறவரு நிலை கூடத் 
தேடும் பிரமனும் மாலும் தேவரும் 
    முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா 
ஆடுங்கழல் புரி அமுதத் திரு நடம் 
    ஆரா வகை தொழுது ஆர்கின்றார். | 
166 | 
1437 
கையும் தலை மிசை புனை அஞ்சலியன 
    கண்ணும் பொழி மழை ஒழியாதே 
பெய்யும் தகையன கரணங்களும் 
    உடன் உருகும் பரிவின பேறு 
எய்தும் மெய்யும் தரைமிசை 
    விழுமுன் பெழுதரும் மின்தாழ் சடையொடு 
ஐயன் திருநடம் எதிர் கும்பிடும் அவர் 
    ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால். | 
167 | 
1438 
இத் தன்மையர் பல முறையும் 
    தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும் 
அத்தன் திரு அருள் பொழியும் 
    கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம் 
மெய்த் தன்மை யினில் விருத்தத் 
    திருமொழி பாடிப் பின்னையும் மேல் மேலும் 
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு 
    திரு நேரிசை மொழி பகர்கின்றார். | 
168 | 
1439 
பத்தனாய்ப் பாட மாட்டேன் 
    என்று முன் எடுத்துப் பண்ணால் 
அத்தா உன் ஆடல் காண்பான் 
    அடியனேன் வந்தவாறு என்று 
இத்திறம் போற்றி நின்றே 
    இன் தமிழ் மாலைப் பாடி 
கைத் திருத் தொண்டு செய்யும் 
    காதலில் பணிந்து போந்தார். | 
169 | 
1440 
நீடிய மணியின் சோதி 
    நிறை திரு முன்றின் மாடும் 
ஆடு உயர் கொடி சூழ் பொன் 
    தேர் அணி திரு வீதி உள்ளும் 
கூடிய பணிகள் செய்து 
    கும்பிடும் தொழிலர் ஆகிப் 
பாடிய புனித வாக்கின் 
    பணிகளும் பயிலச் செய்வார். | 
170 | 
1441 
அருள் பெரு மகிழ்ச்சி பொங்க 
    அன்னம் பாலிக்கும் என்னும் 
திருக் குறுந் தொகைகள் பாடித் 
    திரு உழவாரங் கொண்டு 
பெருத்து எழு காதலோடும் பெரும் 
    திருத் தொண்டு செய்து 
விருப்புறு மேனி கண்ணீர் 
    வெண்ணீற்று வண்டலாட. | 
171 | 
1442 
மேவிய பணிகள் செய்து 
    விளங்குநாள் வேட்களத்துச் 
சேவுயர் கொடியார் தம்மைச் 
    சென்று முன் வணங்கிப் பாடிக் 
காவியம் கண்டார் மன்னும் 
    திருக்கழிப் பாலை தன்னில் 
நாவினுக்கு அரசர் சென்று 
    நண்ணினார் மண்ணோர் வாழ. | 
172 | 
1443 
சின விடை யேறுகைத் தோறும் 
    மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து 
வன பவள வாய்திறந்து வானவர்க்கும் 
    தான் அவனே என்கின்றாள் என்று 
அனைய திருப்பதிகம் உடன் 
    அன்புறு வண் தமிழ் பாடி அங்கு வைகி 
நினைவரியார் தமைப் போற்றி நீடு 
    திருப்புலியூரை நினைந்து மீள்வார். | 
173 | 
1444 
மனைப் படப்பில் கடல் கொழுந்து வளை 
    சொரியும் கழிப் பாலை மழுங்கு நீங்கி 
நனைச்சினை மென் குளிஞாழல் 
    பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில் 
நினைப்பவர் தம் மனம் கோயில் 
    கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரைத் 
தினைத்தனையாம் பொழுது மறந்து 
    உய்வேனோ எனப் பாடி தில்லை சார்ந்தார். | 
174 | 
1445 
அரியானை என்று எடுத்தே 
    அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை 
பிரியாத பெரிய திருத் தாண்டகச் 
    செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி 
விரியா நின்று எவ் உலகும் விளங்கிய 
    பொன் அம்பலத்து மேலி ஆடல் 
புரியா நின்றவர் தம்மைப் பணிந்து 
    தமிழால் பின்னும் போற்றல் செய்வார். | 
175 | 
1446 
செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா 
    எறிக்கும் எனும் சிறந்த வாய்மை 
அருஞ்சொல் வளத் தமிழ் மாலை 
    அதிசயமாம் படி பாடி அன்பு சூழ்ந்த 
நெஞ்சு உருகப் பொழி புனல்வார் 
    கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும் 
தம் செயலின் ஒழியாத திருப்பணியும் 
    மாறாது சாரும் நாளில். | 
176 | 
1447 
கடையுகத்தில் ஆழியின் மேல் மிதந்த 
    கழு மலத்தின் இருந்த செம்கண் 
விடை உகைத்தார் திரு அருளால் 
    வெற்பரையன் பாவை திருமுலைப் பாலோடும் 
அடைய நிறை சிவம் பெருக வளர் 
    ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த 
உடை மறைப் பிள்ளையார் திருவார்த்தை 
    அடியார்கள் உரைப்பக் கேட்டார். | 
177 | 
1448 
ஆழிவிடம் உண்ட வரை அம்மை திருப்பால் 
    அமுதம் உண்ட போதே 
ஏழ் இசை வண் தமிழ் மாலை இவன் 
    எம்மான் எனக் காட்டி இயம்பவல்ல 
காழி வரும் பெரும் தகை சீர் 
    கேட்டலுமே அதிசயமாம் காதல் கூர 
வாழி அவர் மலர்க் கழல்கள் வணங்குவதற்கு 
    மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த. | 
178 | 
1449 
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி 
    அருள் முன் பெற்றுப் 
பொய்ப் பிறவிப் பிணி ஓட்டும் திருவீதி 
    புரண்டு வலம் கொண்டு போந்தே 
எப் புவனங்களும் நிறைந்த திருப்பதியின் 
    எல்லையினை இறைஞ்சி ஏத்திச் 
செப்பரிய பெருமையினார் திரு நாரையூர் 
    பணிந்து பாடிச் செல்வார். | 
179 | 
1450 
தொண்டர் குழாம் புடை சூழத் 
    தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம் 
கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து 
    உருகும் கருணை புறம் பொழிந்து காட்டத் 
தெண் திரைவாய்க் கல் மிதப்பில் 
    உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும் 
வண் தமிழால் எழுது மறை மொழிந்த 
    பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார். | 
180 | 
1451 
நீண்ட வரை வில்லியார் வெஞ்சூலை 
    மடுத்து அருளி நேரே முன்னாள் 
ஆண்ட அரசு எழுந்து அருளக் 
    கேட்டருளி ஆளுடைய பிள்ளையாரும் 
காண்டகைய பெரு விருப்புக் கைம் 
    மிக்க திரு உள்ளக் கருத்தினோடு 
மூண்ட அருள் மனத்து அன்பர் புடை சூழ 
    எழுந்து அருளி முன்னே வந்தார். | 
181 | 
1452 
தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு 
    உருகத் தொண்டர் குழாத்திடையே சென்று 
பழுதில் பெரும் காதலுடன் அடிபணியப் 
    பணிந்தவர்தம் கரங்கள் பற்றி 
எழுதரிய மலக்கையால் எடுத்து 
    இறைஞ்சி விடையின் மேல் வருவார்தம்மை 
அழுது அழைத்துக் கொண்டவர்தாம் 
    அப்பரே என அவரும் அடியேன் என்றார். | 
182 | 
1453 
அம்பிகை செம் பொன் கிண்ணத்து 
    அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த 
செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக்கு 
    அரசர் எனச் சிறந்த சீர்த்தி 
எம் பெரு மக்களும் இயைந்த 
    கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி 
உம்பர்களும் போற்றி இசைப்பச் சிவம் 
    பெருகும் ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம். | 
183 | 
1454 
பிள்ளையார் கழல் வணங்கப் 
    பெற்றேன் என்று அரசு உவப்பப் பெருகு ஞான 
வள்ளலார் வாகீசர் தமை வணங்கப் 
    பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க 
உள்ளம் நிறை காதலினால் ஒருவர் 
    ஒருவரில் கலந்த உண்மை யோடும் 
வெள்ள நீர் திருத்தோணி வீற்று இருந்தார் 
    கழல் வணங்கும் விருப்பின் மிக்கார். | 
184 | 
1455 
அருள் பெருகு தனிக் கடலும் உலகுக்கு எல்லாம் 
    அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும் 
பொருள் சமய முதல் சைவ நெறி தான் 
    பெற்ற புண்ணியக் கண் இரண்டு எனவும் புவனம் உய்ய 
இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் 
    ஈன்றாள் தன் திரு அருளும் எனவும் கூடித் 
தெருள் கலை ஞானக் கன்றும் அரசும் சென்று 
    செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே. | 
185 | 
1456 
பண் பயில் வண்டு அறை சோலை சூழும் 
    காழிப் பரமர் திருக் கோபுரத்தைப் பணிந்துள்புக்கு 
விண் பணிய ஓங்கு பெரு விமானம் 
    தன்னை வலம் கொண்டு தொழுது விழுந்த எல்லைச் 
சண்பை வரு பிள்ளையார் அப்பர் 
    உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்னக் 
கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை 
    கலை பயிலும் மொழி பொழியக் கசிந்து பாடி. | 
186 | 
1457 
பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது 
    பேணி வீற்று இருந்து அருளும் பிரான் முன் நின்று 
பரிவுறு செந்தமிழ் மாலை பத்தி யோடும் 
    பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி 
அரிய வகை புறம் போந்து பிள்ளையார் 
    திருமடத்தில் எழுந்து அருளி அமுது செய்து 
மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள் 
    போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில். | 
187 | 
1458 
அத்தன்மையினில் அரசும் பிள்ளையாரும் 
    அளவளாவிய மகிழ்ச்சி அளவு இலாத 
சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் 
    திருநாவுக்கரசு திரு உள்ளம் தன்னில் 
மைத் தழையும் மணி மிடற்றர் பொன்னி 
    மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கிப் போற்ற 
மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு 
    விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார். | 
188 | 
1459 
ஆண்ட அரசு எழுந்து அருளக் கோலக் காவை 
    அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டு 
மீண்ட அருளினார் அவரும் விடை கொண்டு 
    இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான 
நீண்ட கருப் பறியலூர் புன்கூர் நீடு 
    திருக் குறுக்கை திரு நின்றி யூரும் 
காண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக் 
    கண்ணுதலார் கழல் தொழுது கலந்து செல்வார். | 
189 | 
1460 
மேவு புனல் பொன்னி இருகரையும் சார்ந்து விடை 
    உயர்த்தார் திருச் செம் பொன் பள்ளிபாடிக் 
காவுயரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக் 
    கரைத் துருத்தி வேள்விக்குடி எதிர் கொள் பாடி 
பாவுறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப் 
    பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே 
ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடிகாவில் அணைந்து 
    பணைந்து ஆவடு தண் துறையைச் சார்ந்தார். | 
190 | 
1461 
ஆவடு தண் துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற 
    அளவில் திருத் தாண்டகம் முன்அருளிச் செய்து 
மேவு திருக் குறுந்தொகை நேர் இசையும் 
    சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறு வேறு 
பாவலர் செந்தமிழ்த் தொடையால் பள்ளித் 
    தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும் 
பூ வயலத்தவர் பரவப் பல நாள் தங்கிப் புரிஉறு 
    கைத் தொண்டு போற்றிச் செய்வார். | 
191 | 
1462 
எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர்ப் பொன்னி 
    இடை மருதைச் சென்று எய்திஅன்பினோடு 
மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் 
    தமிழ்ப் பாமாலை பல மகிழச் சாத்திப் 
பொறி அரவம் புனைந்தாரைத் திரு நாகேச்சுரத்துப் 
    போற்றி அரும் தமிழ் மாலை புனைந்துபோந்து 
செறி விரை நன்மலர்ச் சோலைப் பழையாறு 
    எய்தித் திருச்சத்தி முற்றத்திற் சென்று சேர்ந்தார். | 
192 | 
1463 
சென்று சேர்ந்து திருச் சத்தி முற்றத்து 
    இருந்த சிவக் கொழுந்தை 
குன்ற மகள் தன் மனக் காதல் குலவும் 
    பூசை கொண்டு அருளும் 
என்றும் இனிய பெருமானை இறைஞ்சி 
    இயல்பில் திருப்பணிகள் 
முன்றில் அணைந்து செய்து தமிழ் 
    மொழி மாலைகளும் சாத்துவார். | 
193 | 
1464 
கோவாய் முடுகி என்று எடுத்துக் 
    கூற்றம் வந்து குமைப்பதன் முன் 
பூவார் அடிகள் என்று அலைமேல் 
    பொறித்து வைப்பாய் எனப் புகன்று 
நாவார் பதிகம் பாடுதலும் 
    நாதன் தானும் நல்லூரில் 
வா வா என்றே அருள் செய்ய 
    வணங்கி மகிழ்ந்து வாகீசர். | 
194 | 
1465 
நன்மை பெருகஅருள் 
    நெறியே வந்து அணைந்து நல்லூரின் 
மன்னு திருத் தொண்டனார் வணங்கி 
    மகிழ்ந்து எழும் பொழுதில் 
உன்னுடைய நினைப்பதனை 
    முடிகின்றோம் என்று அவர்தம் 
சென்னி மிசைப் பாத மலர் 
    சூட்டினான் சிவபெருமான். | 
195 | 
1466 
நனைந்தனைய திருவடி 
    என்தலைமேல் வைத்தார் என்று 
புனையும் திருத்தாண்டகத்தால் 
    போற்றி இசைத்துப் புனிதர் அருள் 
நினைந்து உருகி விழுந்து எழுந்து 
    நிறைந்து மலர்ந்து ஒழியாத 
தனம் பெரிதும் பெற்று வந்த 
    வறியோன் போல் மனம் தழைத்தார். | 
196 | 
1467 
நாவுக்கு மன்னர் திரு நல்லூரில் நம்பர் பால் 
மேவுற்ற திருப் பணிகள் மேவுற நாளும் செய்து 
பாவுற்ற தமிழ் மாலை பாடிப் பணிந்து ஏத்தித் 
தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகி செல்லு நாள். | 
197 | 
1468 
கருகாவூர் முதலாகக் கண்ணுதலோன் அமர்ந்து அருளும் 
திருவாவூர் திருப் பாலைத்துறை பிறவும் சென்று இறைஞ்சிப் 
பெருகு ஆர்வத் திருத் தொண்டு செய்து பெருந்திரு நல்லூர் 
ஒரு காலும் பிரியாதே உள் உருகிப் பணிகின்றார். | 
198 | 
1469 
ஆளுடைய நாயகன் தன் அருள் பெற்று அங்கு அகன்று போய் 
வாளை பாய் புனல் பழனத் திருப் பழனம் மருங்கு அணைந்து 
காளவிடம் உண்டு இருண்ட கண்டர் பணிக் கலன் பூண்டு 
நீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார். | 
199 | 
1470 
அப்பதியைச் சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும் 
ஒப்பரிய தானங்கள் உள் உருகிப் பணிந்தணைவார் 
மெய்ப்பொருள்தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார் 
செப்பருஞ்சீர் அப்பூதி அடிகள் ஊர் திங்களூர். | 
200 | 
1471 
அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார் 
தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர்ப் 
பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை 
வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர் தம் மனை நண்ண. | 
201 | 
1472 
மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும் 
சுற்றமுடன் களி கூரத் தொழுது எழுந்து சூழ்ந்து மொழிக் 
கொற்றவரை அமுது செயக் குறை கொள்வார் இறைகொள்ளப் 
பெற்ற பெரும் தவத் தொண்டர் திரு உள்ளம் பெறப் பெற்றார். | 
202 | 
1473 
காண்டகைமை இன்றியுமுன் கலந்த பெருங் கேண்மையினார் 
பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும் 
வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால் 
ஆண்ட அரசு அமுது செயத் திரு அமுதாம் படி அமைத்து. | 
203 | 
1474 
திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்றவர் தம் 
பெருநாமம் சாத்திய அப்பிள்ளைதனை அழைத்து அன்பு 
தருஞானத் திருமறையோர் தண்டலையின் வண்கதலிக் 
குரு நாளக் குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார். | 
204 | 
1475 
ஆங்கு அவனும் விரைந்து எய்தி அம்மருங்கு தாழாதே 
பூங் கதலிக் குருத்து அரியப் புகும் அளவில் ஒரு நாகம் 
தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள 
ஓங்கு கதலிக் குருத்துக் கொண்டு ஒல்லை வந்து அணைந்தான். | 
205 | 
1476 
தீய விடம் தலைக் கொள்ளத் தெருமந்து செழும் குருத்தைத் 
தாயகரத்தினில் நீட்டித் தளர்ந்து தனைத் தழல் நாகம் 
மேயபடி உரை செய்யான் விழக் கண்டு கெட்டு ஒழிந்தோம் 
தூயவர் இங்கு அமுது செயத் தொடங்கார் என்று அது ஒளித்தார். | 
206 | 
1477 
தம் புதல்வன் சவம் மறைத்துத் தடுமாற்றம் இலராகி 
எம் பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச 
உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம் 
நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார். | 
207 | 
1478 
அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய்க் 
கொன்றை நறும் சடையார் தம் கோயிலின் முன் கொணர்வித்தே 
ஒன்று கொலாம் எனப் பதிகம் எடுத்து உடையான் சீர் பாடப் 
பின்றைவிடம் போய் நீங்கிப் பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான். | 
208 | 
1479 
அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது 
இருந்ததற்குத் தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க 
வருந்தும் அவர் மனைப் புகுந்து வாகீசத் திருமுனிவர் 
விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள். | 
209 | 
1480 
திங்களூர் தனில் நின்றும் திருமறையோர் பின் செல்லப் 
பைங்கண் விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதி புகுந்து 
தங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து 
பொங்கிய அன்புற வணங்கி முன் நின்று போற்றி இசைப்பார். | 
210 | 
1481 
புடை மாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொன் கழல் கீழ் 
அடை மாலைச் சீலம் உடை அப்பூதி அடிகள் தமை 
நடைமாணச் சிறப்பித்து நன்மை புரி தீந்தமிழின் 
தொடைமாலைத் திருப்பதிகச் சொன்மாலை பாடினார். | 
211 | 
1482 
எழும் பணியும் இளம்பிறையும் அணிந்தவரை எம் மருங்கும் 
தொழும்பணி மேற் கொண்டு அருளி திருச்சோற்றுத் துறை முதலாத் 
தழும்புறு கேண்மையில் நண்ணித் தானங்கள் பல பாடிச் 
செம்பழனத்து இறை கோயில் திருத் தொண்டு செய்து இருந்தார். | 
212 | 
1483 
சால நாள் அங்கு அமர்ந்து தம் தலைமேல் தாள் வைத்த 
ஆலமார் மணி மிடற்றார் அணி மலர்ச் சேவடி நினைந்து 
சேலுலாம் புனல் பொன்னித் தென்கரை ஏறிச் சென்று 
கோல நீள் மணி மாடத் திரு நல்லூர் குறுகினார். | 
213 | 
1484 
அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது 
பொங்கிய அன்பொடு திளைத்துப் போற்றி இசைத்துப் பணி செயும் நாள் 
தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு 
செங்கண் மால் அறிவரியார் திருவாரூர் தொழ நினைந்தார். | 
214 | 
1485 
நல்லூரில் நம்பர் அருள் பெற்றுப் போய்ப் பழையாறை 
பல்லூர் வெண்டலைக் கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து 
சொல்லூர் வண்தமிழ் பாடி வலஞ் சுழியைத் தொழுது ஏத்தி 
அல்லூர் வெண் பிறை அணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி. | 
215 | 
1486 
நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர் 
பாலூரும் இன் மொழியாள் பாகனார் கழல் பரவி 
மேலூர்தி விடைக் கொடியார் மேவும் இடம் பல பாடிக் 
சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திரு வாஞ்சியம் அணைந்தார். | 
216 | 
1487 
பெருவாச மலர்ச் சோலைப் பெரு வேளூர் பணிந்து ஏத்தி 
முருகாரும் மலர்க் கொன்றை முதல்வனார் பதி பிறவும் 
திருவாரும் விளமருடன் சென்று இறைஞ்சி வாகீசர் 
மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார். | 
217 | 
1488 
ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள் தாம் 
நீண்ட சடை முடியார் பால் நிறைந்த அருள் பெற்றுடையார் 
காண் தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும் 
சேண் திகழ் வீதிகள் பொலியத் திரு மலி மங்கலம் செய்தார். | 
218 | 
1489 
வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில் 
கல்லே மிதப்பாகப் போந்தவர் வந்தார் எனும் களிப்பால் 
எல்லையில் தொண்டர் எயில்புறம் சென்று எதிர் கொண்டபோது 
சொல்லின் அரசர் வணங்கித் தொழுது உரைசெய்து அணைவார். | 
219 | 
1490 
பற்று ஒன்று இலாவரும் பாதகர் ஆகும் அமணர் தம் பால் 
உற்ற பிணி ஒழிந்து உய்யப் போந்தேன் பெறல் ஆவது ஒன்றே 
புற்றிடம் கொண்டான் தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் என்று 
அற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள் அணைந்தார். | 
220 | 
1491 
சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணி 
வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி 
ஆழி வரைத் திரு மாளிகை வாயில் அவை புகுந்து 
நீள் சுடர் மா மணிப் புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார். | 
221 | 
1492 
கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம் 
கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூரக் கண்கள் 
தண்துளி மாரி பொழியத் திரு மூலட்டானர் தம்மைப் 
புண்டரிகக் கழல் போற்றித் திருத்தாண்டகம் புனைந்து. | 
222 | 
1493 
காண்டலே கருத்தாய் நினைந்து என்னும் கலைப் பதிகம் 
தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி 
ஈண்டு மணிக் கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்பு 
பூண்ட மனத்தொடு நீள் திருவாயில் புறத்து அணைந்தார். | 
223 | 
1494 
செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின் 
    முன் தேவ ஆசிரியன் சார்ந்து 
கொய்யுமா மலர்ச் சோலைக் குயில் கூவ 
    மயில் ஆலும் ஆரூராரைக் 
கையினால் தொழாது ஒழிந்து கனி 
    இருக்கக் காய் கவர்ந்த கள்வனேன் என்று 
எய்து அரிய கை யறவால் திருப்பதிகம் 
    அருள் செய்து அங்கு இருந்தார் அன்றே. | 
224 | 
1495 
மார் பாரப் பொழி கண்ணீர் மழை 
    வாரும் திருவடிவும் மதுரவாக்கில் 
சேர் வாகும் திருவாயில் தீம் தமிழின் 
    மாலைகளும் செம் பொன் தாளே 
சார்வான திருமனமும் உழவாரத் 
    தனிப்படையும் தாமும் ஆகிப் 
பார் வாழத் திரு வீதிப் பணி செய்து 
    பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார். | 
225 | 
1496 
நீடு புகழ்த் திருவாரூர் நிலவு மணிப் 
    புற்றிடம் கொள் நிருத்தர் தம்மைக் 
கூடிய அன்பொடு காலங்களில் 
    அணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப் 
பாடு இளம் பூதத்தினான் எனும் 
    பதிகம் முதலான பலவும் பாடி 
நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் 
    கரைந்து உருகி நயந்து செல்வார். | 
226 | 
1497 
நான் மறைநூல் பெருமை நமி நந்தி 
    அடிகள் திருத்தொண்டின் நன்மை 
பான்மை நிலையால் அவரைப் பரமர் 
    திருவிருத்ததுள் வைத்துப் பாடி 
தேன் மருவும் கொன்றையார் திருவாரூர் 
    அரன் நெறியில் நிகழும் தன்மை 
ஆன திறமும் போற்றி அணி வீதிப் 
    பணி செய்து அங்கு அமரும் நாளில். | 
227 | 
1498 
நீர் ஆரும் சடை முடியார் நிலவு 
    திரு வலி வலமும் நினைந்து சென்று 
வார் ஆரும் முலை மங்கை உமை 
    பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடிக் 
கார் ஆரும் கறைக் கண்டர் கீழ் 
    வேளுர் கன்றாப் பூர் கலந்து பாடி 
ஆராத காதலினால் திருவாரூர் 
    தனில் மீண்டும் அணைந்தார் அன்றே. | 
228 | 
1499 
மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப் 
    பெருமாள் பவனி தன்னில் 
தேவருடன் முனிவர்கள் முன் 
    சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து 
மூவுலகும் களி கூர வரும் பெருமை 
    முறைமை யெலாம் கண்டு போற்றி 
நாவினுக்குத் தனி அரசர் நயக்கு 
    நாள் நம்பர் திரு அருளினாலே. | 
229 | 
1500 
திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவ 
    பெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும் 
விருப்புடைய உள்ளத்து மேவி எழும் 
    காதல் புரி வேட்கை கூர 
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு 
    தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்துப் 
பொருப்பரையன் மடப் பாவை இடப் 
    பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார். | 
230 | 
1501 
அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் 
    திருப்புகலி அதன் கண் நின்றும் 
பன்னாகப் பூண் அணிவார் பயின்ற 
    திருப்பதி பலவும் பணிந்து செல்வார் 
புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் 
    வந்து இறைஞ்சிப் பொருவு இல் சீர்த்தி 
மின் ஆரும் புரி முந்நூல் முருகனார் 
    திருமடத்தில் மேவும் காளை. | 
231 | 
1502 
ஆண்ட அரசு எழுந்து அருளி அணி 
    ஆரூர் மணிப் புற்றில் அமர்ந்து வாழும் 
நீண்ட சுடர் மா மணியைக் கும்பிட்டு 
    நீடு திருப்புகலூர் நோக்கி 
மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி 
    எதிர்கொள்ளும் விருப்பி னோடும் 
ஈண்டு பெரும் தொண்டர் குழாம் புடை சூழ 
    எழுந்து அருளி எதிரே சென்றார். | 
232 | 
1503 
கரண்டமலி தடம் பொய்கைக் காழியர் 
    கோன் எதிர் அணையும் காதல் கேட்டு 
வரன்று மணிப் புனற்புகலூர் நோக்கி 
    வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார் 
திரண்டு வரும் திரு நீற்றுத் தொண்டர் 
    குழாம் இரு திறமும் சேர்ந்த போதில் 
இரண்டு நிலவின் கடல்கள் ஒன்றாகி 
    அணைந்த போல் இசைந்த அன்றே. | 
233 | 
1504 
திருநாவுக்கரசர் எதிர் சென்று 
    இறைஞ்சச் சிரபுரத்துத் தெய்வ வாய்மை 
பெரு ஞான சம்பந்தப் பிள்ளையார் 
    எதிர் வணங்கி அப்பரே நீர் 
வரு நாளில் திருவாரூர் நிகழ் 
    பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற 
அரு நாமத்து அஞ்செழுத்தும் பயில் 
    வாய்மை அவரும் எதிர் அருளிச் செய்தார். | 
234 | 
1505 
சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகராளும் 
மைத் தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம் 
இத் தகைமைத்து என்று என் மொழிகேன்? என்று அருள் செய்தார் 
முத்து விதான மணிப் பொன் கவரி மொழி மாலை. | 
235 | 
1506 
அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணி சண்பை 
மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும் 
கொய்ம் மலர் வாவித் தென் திரு ஆரூர் கும்பிட்டே 
உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார். | 
236 | 
1507 
மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்கச் செந் 
தாமரை ஓடைச் சண்பையர் நாதன் தான் ஏக 
நாமரு சொல்லின் நாதரும் ஆர்வத்தொடு புக்கார் 
பூ மலர் வாசம் தண் பணை சூழும் புகலூரில். | 
237 | 
1508 
அத் திரு மூதூர் மேவிய நாவுக் கரசுந்தம் 
சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம் 
மொய்த்து இழி தாரைக் கண் பொழி நீர் மெய்ம் முழுதாரப் 
பைத் தலை நாகப் பூண் அணிவாரைப் பணி உற்றார். | 
238 | 
1509 
தேவர் பிரானைத் தென் புகலூர் மன்னிய தேனைப் 
பா இயல் மாலைச் செந்தமிழ் பாடிப் பரிவோடு 
மேவிய காலம் தோறும் விருப்பில் கும்பிட்டே 
ஓவுதல் ஓவு திருப்பணி செய்து அங்கு உறைகின்றார். | 
239 | 
1510 
சீர் தரு செங்காட்டங் குடி நீடும் திருநள்ளாறு 
ஆர் தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி 
வார் திகழ் மென் முலையான் ஒரு பாகன் திருமருகல் 
ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார். | 
240 | 
1511 
அப்படிச் சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும் 
துப்பு உறழ் வேணிக் கண் நுதலாரைத் தொழுது இப்பால் 
மெய்ப் பொருள் ஞானம் பெற்றவர் வேணு புரத்து எங்கள் 
பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில். | 
241 | 
1512 
பிள்ளையார் எழுந்து அருளப் பெரு விருப்பால் வாகீசர் 
உள்ளம் மகிழ்ந்து எதிர் கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்கண் 
வள்ளலார் சிறுத் தொண்டர் மற்று அவர் பால் எழுந்து அருள 
எள் அரும் சீர் நீல நக்கர் தாமும் எழுந்து அருளினார். | 
242 | 
1513 
ஆங்கு அணையும் அவர்களுடன் அப்பதியில் அந்தணராம் 
ஓங்கு புகழ் முருகனார் திரு மடத்தில் உடனாகப் 
பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை 
நீங்கரிய திருத் தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார். | 
243 | 
1514 
திருப் பதிகச் செழுந்தமிழின் திறம் போற்றி மகிழ்வுற்றுப் 
பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகர் பொன் தாளில் 
விருப்பு உடைய திருத் தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு 
ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார். | 
244 | 
1515 
அந் நாளில் தமக்கு ஏற்ற திருத் தொண்டின் நெறி ஆற்ற 
மின்னார் செஞ்சடை அண்ணல் மேவும் பதி எனைப் பலவும் 
முன்னாகச் சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்குப் 
பொன்னாரும் மணி மாடப் பூம் புகலூர் தொழுது அகன்றார். | 
245 | 
1516 
திரு நீல நக்க அடிகள் சிறுத்தொண்டர் முருகனார் 
பெருநீர்மை அடியார்கள் பிறரும் விடை கொண்டு ஏக 
ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும் 
வரும் சீர் செஞ்சடைக் கரந்தார் திரு அம்பர் வணங்கினார். | 
246 | 
1517 
செங்குமுத மலர் வாவித் திருக்கடவூர் அணைந்து அருளிப் 
பொங்கிய வெங்கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்திக் 
குங்குலியக் கலயனார் திருமத்தில் குறை அறுப்ப 
அங்கு அவர்பால் சிவன் அடியாருடன் அமுது செய்தார்கள். | 
247 | 
1518 
சீர் மன்னும் திருக் கடவூர்த் திருமயானமும் வணங்கி 
ஏர் மன்னும் இன்னிசைப்பாப் பல பாடி இனிது அமர்ந்து 
கார் மன்னும் கறைக் கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்று 
தேர் மன்னும் மணி வீதித் திரு ஆக்கூர் சென்று அணைந்தார். | 
248 | 
1519 
சார்ந்தார் தம் புகல் இடத்தைத் தான் தோன்றி மாடத்துக் 
கூர்ந்து ஆர்வம் உறப் பணிந்து கோதில் தமிழ்த்தொடை புனைந்து 
வார்த்து ஆடும் சடையார் தம் பதி பலவும் வணங்கி உடன் 
சேர்ந்தார்கள் தம் பெருமான் திரு வீழி மிழலையினை. | 
249 | 
1520 
வீழி மிழலை வந்து அணைய மேவும் நாவுக்கு அரசினையும் 
காழி ஞானப் பிள்ளையையும் கலந்த உள்ளக் காதலினால் 
ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன் 
வாழி மறையோர் எதிர் கொண்டு வணங்க வணங்கி உள்புக்கார். | 
250 | 
1521 
மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்கு 
நீடு கதலி தழைப் பூதம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்துப் 
பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும் 
கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார். | 
251 | 
1522 
சென்று உள் புகுந்து திருவீழி மிழலை அமர்ந்த செங்கனகக் 
குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு 
முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி 
வென்றி விடையார் சேவடிக் கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார். | 
252 | 
1523 
கைகள் குவித்துக் கழல் போற்றிக் 
    கலந்த அன்பு கரைந்து உருக 
மெய்யில் வழியும் கண் அருவி 
    விரவப் பரவும் சொல் மாலை 
செய்ய சடையார் தமைச் சேரார் 
    தீங்கு நெறி சேர்கின்றார் என்று 
உய்யும் நெறித் தாண்ட தம் மொழிந்து 
    அங்கு ஒழியாக் காதல் சிறந்து ஓங்க. | 
253 | 
1524 
முன்னாள் அயனும் திருமாலும் 
    முடிவும் முதலும் காணாத 
பொன்னார் மேனி மணி வெற்பைப் 
    பூ நீர் மிழலையினில் போற்றிப் 
பல் நாள் பிரியா நிலைமையினால் 
    பயிலக் கும்பிட்டு இருப்பாராய் 
அந்நாள் மறையோர் திருப்பதியில் 
    இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள். | 
254 | 
1525 
சீரின் விளங்கும் திருத்தொண்டர் 
    இருந்து சில நாள் சென்று அதன் பின் 
மாரி சுருங்கி வளம் பொன்னி நதியும் 
    பருவம் மாறுதலும் 
நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் 
    பல மன் உயிர்கள் எல்லாம் 
பாரின் மலிந்த இலம் பாட்டில் 
    படர் கூர் வறுமை பரந்ததால். | 
255 | 
1526 
வையம் எங்கும் வற்கடம் 
    ஆய்ச் செல்ல உலகோர் வருத்தமுற 
நையும் நாளில் பிள்ளையார் 
    தமக்கும் நாவுக்கு அரசருக்கும் 
கையில் மானும் மழுவும் உடன் 
    காணக் கனவில் எழுந்து அருளிச் 
செய்ய சடையார் திருவீழி மிழலை 
    உடையார் அருள் செய்வார். | 
256 | 
1527 
கால நிலைமையால் உங்கள் 
    கருத்தில் வாட்டம் உறீர் எனினும் 
ஏல உம்மை வழி படுவார்க்கு 
    அளிக்க அளிக்கின்றோம் என்று 
கோலம் காண எழுந்து அருளிக் 
    குலவும் பெருமை இருவர்க்கும் 
ஞாலம் அறியப் படிக்காசு 
    வைத்தார் மிழலை நாயகனார். | 
257 | 
1528 
விண்ணின் நின்று இழிந்த விமானத்தின் 
    கிழக்கும் மேற்கும் பீடத்தில் 
அண்ணல் புகலி ஆண் தகையார் 
    தமக்கும் ஆண்ட அரசினுக்கும் 
நண்ணும் நாள்கள் தொறும் காசு 
    படிவைத்து அருள நானிலத்தில் 
எண்ணில் அடியார் உடன் அமுது 
    செய்து அங்கு இருந்தார் இருவர்களும். | 
258 | 
1529 
அல்லார் கண்டத்து அண்டர் பிரான் 
    அருளால் பெற்ற படிக்காசு 
பல்லாறு இயன்ற வளம் பெருகப் 
    பரமன் அடியார் ஆனார்கள் 
எல்லாம் எய்தி உண்கஎன இரண்டு 
    பொழுதும் பறை நிகழ்த்திச் 
சொல்லால் சாற்றிச் சோறு இட்டார் 
    துயர் கூர் வறுமை தொலைத்திட்டார். | 
259 | 
1530 
ஈசர் மிழலை இறையவர் பால் 
    இமையப் பாவை திருமுலைப் பால் 
தேசம் உய்ய உண்டவர் தாம் 
    திருமா மகனார் ஆதலினால் 
காசு வாசியுடன் பெற்றார் கைத் 
    தொண்டு ஆகும் படிமையினால் 
வாசி இல்லாக் காசு படி 
    பெற்று வந்தார் வாகீசர். | 
260 | 
1531 
ஆறு சடை மேல் அணிந்து அருளும் 
    அண்ணல் வைத்த படிக் காசால் 
ஈறு இலாத பொருள் உடைய 
    இருவர் உடைய திருமடங்கள் 
சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து 
    உண்ண உண்ணத் தொலையாதே 
ஏறு பெருமை புவி போற்ற 
    இன்புற்று இருக்கும் அந் நாளில். | 
261 | 
1532 
காலம் தவறு தீர்ந்து எங்கும் 
    கலி வான் பொழிந்த புனல் கலந்து 
ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி 
    உணவு பெருகி நலம் சிறப்ப 
மூல அன்பர் இருவர்களும் 
    மொழி மாலைகளும் பல சாத்தி 
நீல கண்டர் உறை பதிகள் 
    பிறவும் வணங்க நினைவுற்றார். | 
262 | 
1533 
வாய்ந்த மிழலை மா மணியை 
    வணங்கிப் பிரியா விடை கொண்டு 
பூந்தண் புனல் சூழ் வாஞ்சியத்தைப் 
    போற்றிப் புனிதர் வாழ்பதிகள் 
ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி 
    இசை வண் தமிழ்கள் புனைந்து போய்ச் 
சேர்ந்தார் செல்வத் திருமறைக்காடு 
    எல்லை இல்லாச் சீர்த்தியினார். | 
263 | 
1534 
மன்றல் விரவு மலர்ப் புன்னை 
    மணம் சூழ் சோலை உப்பளத்தின் 
முன்றில் தோறும் சிறு மடவார் 
    முத்தம் கொழிக்கும் மறைக் காட்டுக் 
குன்ற வில்லியார் மகிழ்ந்த 
    கோயில் புகுந்து வலம் கொண்டு 
சென்று சேர்ந்தார் தென் புகலிக் 
    கோவும் அரசும் திரு முன்பு. | 
264 | 
1535 
பரவை ஓதக் கழிக்கானல் 
    பாங்கு நெருங்கும் அப் பதியில் 
அரவச் சடை அந்தணனாரை 
    அகில மறைகள் அர்ச்சனை செய்து 
உரவக் கதவம் திருக் காப்புச் 
    செய்த அந்நாள் முதல் இந்நாள் 
வரையும் அடைத்தே நிற்கின்ற 
    மணி நீள வாயில் வணங்குவார். | 
265 | 
1536 
தொல்லை வேதம் திருக் காப்புச் 
    செய்த வாயில் தொடர் அகற்ற 
வல்ல அன்பர் அணையாமை மருங்கு 
    ஓர் வாயில் வழி எய்தி 
அல்லல் தீர்ப்பார் தமை அருச்சிப்பார்கள் 
    தொழுவார் ஆம்படி கண்டு 
எல்லை இல்லாப் பெரும் புகழார் 
    இதனை அங்குக் கேட்டு அறிந்தார். | 
266 | 
1537 
ஆங்கு அப் பரிசை அறிந்து அருளி 
    ஆழித் தோணி புரத்து அரசர் 
ஓங்கு வேதம் அருச்சனை செய் 
    உம்பர் பிரானை உள் புக்குத் 
தேம்கா திருவோம் நேர் இறைஞ்சத் 
    திருமுன் கதவம் திருக்காப்பு 
நீங்கப் பாடும் அப்பர் என 
    நீடும் திருநாவுக்கு அரசர். | 
267 | 
1538 
உண்ணீர்மையினால் பிள்ளையார் 
    உரை செய்து அருள அதனாலே 
பண்ணினேரு மொழியாள் என்று 
    எடுத்துப் பாடப் பயன் துய்ப்பான் 
தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு 
    நீக்கத் தாழ்க்கத் திருக் கடைக்காப்பு 
எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் 
    என்று பாடி இறைஞ்சுதலும். | 
268 | 
1539 
வேத வளத்தின் மெய்ப் பொருளின் 
    அருளால் விளங்கும் மணிக் கதவம் 
காதல் அன்பர் முன்பு திருக் 
    காப்பு நீங்கக் கலை மொழிக்கு 
நாதர் ஞான முனிவருடன் 
    தொழுது விழுந்தார் ஞாலத்துள் 
ஓத ஒலியின் மிக்கு எழுந்த 
    தும்பர் ஆர்ப்பும் மறை ஒலியும். | 
269 | 
1540 
அன்பர் ஈட்டம் களி சிறப்ப 
    ஆண்ட அரசும் சிவக் கன்றும் 
இன்ப வெள்ளத்து இடை மூழ்கி 
    எழுந்து உள் புகுந்து தம் பெருமான் 
முன்பு பணிந்து போற்றி இசைத்துப் 
    பரவி மொழி மாலைகள் பாடி 
என்பு கரைய உள் உருகி இறைஞ்சி 
    அரிதில் புறத்து அணைந்தார். | 
270 | 
1541 
புறம்பு நின்று வாகீசர் புனிதர் 
    அருளால் இக் கதவம் 
திறந்தும் அடைத்தும் செல்லும் 
    நெறி திருந்த மலையாள் திருமுலையில் 
கறந்த ஞானம் குழைத்த அமுது 
    செய்த புகலிக் கவுணியரை 
நிறைந்த கதவம் அடைக்கும் 
    வகை நீரும் பாடி அருளும் என. | 
271 | 
1542 
சண்பை ஆளும் தமிழ் விரகர் 
    தாமும் திரு நாவுக்கரசர் 
பண்பின் மொழிந்த உரை கொண்டு 
    பதிகம் பாடும் அவ்வளவில் 
கண் பொற்பமைந்த நுதல் 
    காளகண்டர் அருளால் கடிதுடனே 
திண் பொன் கதவம் திருக் காப்புச் 
    செய்து எடுத்த திருப் பாட்டில். | 
272 | 
1543 
அது கண்டு உடைய பிள்ளையார் 
    தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து 
இது நம் பெருமான் அருள் செய்யப் 
    பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின் 
பதிகம் நிரம்பப் பிள்ளையார் 
    பாடித் தொழுது பணிவு உற்றார் 
எதிர் பொன் திருவாயிலின் வழக்கம் 
    என்றும் நிகழ்ச்சி எய்தியது ஆல். | 
273 | 
1544 
அங்கு நிகழ்ந்த அச் செயல் கண்டு 
    அடியார் எல்லாம் அதிசயித்துப் 
பொங்கு புளகம் எய்திட மெய் 
    பொழியும் கண்ணீர் பரந்து இழிய 
எங்கும் நிகர் ஒன்று இல்லாத 
    இருவர் பாதம் இறைஞ்சினார் 
நங்கள் புகலிப் பெரும் தகையும் 
    அரசும் மடத்தில் நண்ணிய பின். | 
274 | 
1545 
அரிதில் திறக்கத் தாம் பாட 
    அடைக்க அவர் பாடிய எளிமை 
கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது 
    அயர்ந்தேன் எனக் கவன்று 
பெரிதும் அஞ்சித் திருமடத்தில் 
    ஒருபால் அணைந்து பேழ் கணித்து 
மருவும் உணர்வில் துயில் கொண்டார் 
    வாய்மை திறம்பா வாகீசர். | 
275 | 
1546 
மன்னும் செல்வ மறைக்காட்டு 
    மணியின் பாதம் மனத்தின் கண் 
உன்னித் துயிலும் பொழுதின் கண் 
    உமை ஓர் பாகம் உடையவர் தாம் 
பொன்னின் மேனி வெண் நீறு 
    புனைந்த கோலப் பொலிவினொடும் 
துன்னி அவர்க்கு வாய் மூரில் 
    இருப்போம் தொடர வா என்றார். | 
276 | 
1547 
போதம் நிகழ வா என்று 
    போனார் என் கொல் எனப் பாடி 
ஈது எம்பெருமான் அருளாகில் 
    யானும் போவேன் என்று எழுந்து 
வேத வனத்தைப் புறகிட்டு 
    விரைந்து போக அவர் முன்னே 
ஆதி மூர்த்தி முன் காட்டும் 
    அவ் வேடத்தால் எழுந்து அருள. | 
277 | 
1548 
சீரார் பதியின் நின்று எழுந்து 
    செல்லும் திருநாவுக்கு அரசர் 
ஆரா அன்பில் ஆரமுதம் உண்ண 
    எய்தா வாறே போல் 
நீரார் சடையார் எழுந்து அருள 
    நெடிது பின்பு செல்லும் அவர் 
பேராளரை முன் தொடர்ந்து அணையப் 
    பெறுவார் எய்தப் பெற்று இலரால். | 
278 | 
1549 
அன்ன வண்ணம் எழுந்து அருளி 
    அணித்தே காட்சி கொடுப்பார் போல் 
பொன்னின் கோயில் ஒன்று எதிரே 
    காட்டி அதனுள் புக்கு அருளத் 
துன்னும் தொண்டர் அம் மருங்கு 
    விரைந்து தொடரப் போந்த படி 
மன்னும் புகலி வள்ளலார் தாமும் 
    கேட்டு வந்து அணைந்தார். | 
279 | 
1550 
அழைத்துக் கொடு போந்து அணியார் 
    போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து 
பிழைத்துச் செவ்வி அறியாதே 
    திறப்பித் தேனுக்கே அல்லால் 
உழைத்தாம் ஒளித்தால் கதவம் 
    தொண்டு உறைக்கப் பாடி அடைப்பித்த 
தழைத்த மொழியார் உப்பாலார் 
    தாம் இங்கு எப்பால் மறைவது என. | 
280 | 
1551 
மாட நீடு திருப்புகலி 
    மன்னர் அவர்க்கு மால் அயனும் 
நேடி இன்னங் காணாதார் 
    நேரே காட்சி கொடுத்து அருள 
ஆடல் கண்டு பணிந்து ஏத்தி 
    அரசும் காணக் காட்டுதலும் 
பாட அடியார் என்று எடுத்துப் 
    பரமர் தம்மைப் பாடினார். | 
281 | 
1552 
பாடும் தமிழ் மாலைகள் கொண்டு 
    பரமர் தாமும் எழுந்து அருள 
நீடும் திருவாய்மூர் அடைந்து 
    நிலவும் கோயில் வலம் செய்து 
சூடும் பிறையார் பெரும் தொண்டர் 
    தொழுது போற்றித் துதி செய்து 
நாடும் காதல் வளர்ந்து ஓங்க 
    நயந்து அந் நகரில் உடன் உறைந்தார். | 
282 | 
1553 
ஆண்ட அரசும் பிள்ளையார் உடனே 
    அங்கண் இனிது அமர்ந்து 
பூண்ட காதல் பொங்கி எழ 
    வாய் மூர் அடிகள் போற்றி 
மூண்ட அன்பின் மொழிமாலை 
    சாத்தி ஞான முனிவர் ஒடு 
மீண்டு வந்து திருமறைக் காடு 
    எய்தி விமலர் தாள் பணிந்தார். | 
283 | 
1554 
ஆதி முதல்வர் தமைப் பணிந்து அங்கு 
    ஆன பணி செய்து அமரும் நாள் 
சீத மதி வெண் குடை வளவர் 
    மகளார் தென்னன் தேவியாம் 
கோதில் குணத்துப் பாண்டி மா 
    தேவியார் முன் குலச்சிறையார் 
போத விட்டார் சிலர் வந்தார் 
    புகலி வேந்தர் தமைக் காண. | 
284 | 
1555 
வந்து சிவனார் திருமறைக் காடு 
    எய்தி மன்னு வேணுபுரி 
அந்தணாளர் தமக்கு அறிவித்து 
    அவர் பால் எய்தி அடி வணங்க 
சிந்தை மகிழ்ந்து தீது இன்மை 
    வனவத் தீங்கும் உளவாமோ 
இந்த உலகம் உய வந்தீர் 
    இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார். | 
285 | 
1556 
சைவ நெறி வைதிகம் நிற்கச் 
    சழக்கு நெறியைத் தவம் என்னும் 
பொய் வல் அமணர் செயல் தன்னைப் 
    பொறுக்க கில்லோம் எனக் கேட்டே 
அவ் வன் தொழிலோர் செயல் மாற்றி 
    ஆதிசைவ நெறி விளங்கத் 
தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் 
    கொள் சண்பைத் திரு மறையோர். | 
286 | 
1557 
ஆய பொழுது திரு நாவுக்கரசு 
    புகலி ஆண் தகைக்குக் 
காய மாசு பெருக்கி உழல் 
    கலதி அமணர் கடுவினை செய் 
மாயை சாலம் மிக வல்லார் அவர் 
    மற்று என்னை முன் செய்த 
தீய தொழிலும் பல கெட்டேன் சொல் 
    இசையேன் யான் என்றார். | 
287 | 
1558 
என்று கூற எல்லை இலா 
    நீறு போற்றும் இருவரையும் 
சென்று காணும் கருத்து உடையேன் 
    அங்குத் தீங்கு புரி அமணர் 
நின்ற நிலைமை அழிவித்துச் சைவ 
    நெறி பாரித்து அன்றி 
ஒன்றும் செய்யேன் ஆணை உமது 
    என்றார் உடைய பிள்ளையார். | 
288 | 
1559 
போமா துணிந்து நீர் அங்குப் 
    போகப் போதா அவ் அமணர் 
தீ மாயையினை யானே போய்ச் 
    சிதைத்து வருகின்றேன் என்ன 
ஆமாறு எல்லாம் உரைத்து அவரை 
    மறுக்க மாட்டது அரசு இருப்பத் 
தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் 
    போனார் ஞானத் தலைவனார். | 
289 | 
1560 
வேணு புரக்கோன் எழுந்து அருள 
    விடைகொண்டு இருந்த வாகீசர் 
பூணும் அன்பால் மறைக்காட்டில் 
    புனிதர் தம்மைப் போற்றி இசைத்துப் 
பேணி இருந்து அங்கு உறையும் நாள் 
    பெயர்வார் வீழிமிழலை அமர் 
தாணுவின் தன் செய்ய கழல் 
    மீண்டும் சார நினைக்கின்றார். | 
290 | 
1561 
சோலை மறைக் காட்டு அமர்ந்து 
    அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய் 
வேலை விடம் உண்டவர் வீழி மிழலை 
    மீண்டும் செல்வன் என 
ஞாலம் நிகழ்ந்த நாகைக் காரோணம் 
    பிறவும் தாம் பணிந்து 
சாலு மொழி வண் தமிழ்ப் பாடித் 
    தலைவர் மிழலை வந்து அடைந்தார். | 
291 | 
1562 
வீழி மிழலை தனிப் பணிந்து 
    வேத முதல்வர் தாம் இருப்ப 
ஆழி வலம் ஏந்திய அரியால் 
    ஆகாசத்தின் நின்று இழிந்த 
வாழி மலர்ந்த கோயில்தனில் 
    மன்னும் பொருளை போற்றிசைத்துத் 
தாழும் நாளில் பிறபதியும் பணியும் 
    காதல் தலை நிற்பார். | 
292 | 
1563 
பூவில் பொலியும் புனல் பொன்னிக் 
    கரை போய்ப் பணிவார் பொற்பு அமைந்த 
ஆவுக்கு அருளும் ஆவடு தண் 
    துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி 
நாவுக் கரசர் ஞானப் போன 
    கர்க்குச் செம் பொன் ஆயிரமும் 
பாவுக்கு அளித்த திறம் போற்றிப் 
    போந்து பிறவும் பணிகின்றார். | 
293 | 
1564 
செய்ய சடையார் பழையாறை எய்த 
    அதனில் செல் பொழுதில் 
மையல் அமணர் மறைத்த வடதளியின் 
    மன்னும் சிவ னாரைக் 
கைகள் கூப்பித் தொழுது அருளக் 
    கண்டவாற்றால் அமணர்கள் தம் 
பொய் கொள் விமானம் எனக் கேட்டுப் 
    பொறாத உள்ளம் மிகப் புழுங்கி. | 
294 | 
1565 
அந்த விமானம் தனக்கு அருகா 
    ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்திக் 
கந்தம் மலரும் கடிக் கொன்றை 
    முடியார் செய்ய கழல் உன்னி 
மந்த அமணர் வஞ்சனையால் 
    மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப் 
பந்தம் கொண்ட குண்டர் திறம் 
    பாற்றும் என்று பணிந்து இருந்தார். | 
295 | 
1566 
வண்ணம் கண்டு நான் உம்மை 
    வணங்கி அன்றிப் போகேன் என்று 
எண்ண முடிக்கும் வாகீசர் 
    இருந்தார் அமுது செய்யாதே 
அண்ணலாரும் அது உணர்ந்து 
    அங்கு அரசு தம்மைப் பணிவதற்குத் 
திண்ணமாக மன்னனுக்குக் 
    கனவில் அருளிச் செய்கின்றார். | 
296 | 
1567 
அறிவில் அமணர் நமை மறைப்ப 
    இருந்தோம் என்று அங்கு அடையாளக் 
குறிகள் அறியச் செய்து அருளி 
    நம்மை அரசு கும்பிடுவான் 
நெறியில் அமணர் தமை அழித்து 
    நீக்கிப் போக்கு என்று அருள் புரிய 
செறிவில் அறிவுற்று எழுந்து அவனும் 
    செங்கை தலைமேல் குவித்து இறைஞ்சி. | 
297 | 
1568 
கண்ட வியப்பு மந்திரிகட்கு 
    இயம்பிக் கூடக் கடிது எய்தி 
அண்டர் பெருமான் அருள் செய்த 
    அடையாளத்தின் வழி கண்டு 
குண்டர் செய்த வஞ்சணையைக் 
    குறித்து வேந்தன் குலவு பெரும் 
தொண்டர் தம்மை அடி வணங்கித் 
    தொக்க அமணர் தூர் அறுத்தான். | 
298 | 
1569 
ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் 
    ஆயிரமும் மாய்ந்தற் பின் 
மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் 
    ஆக்கி விளக்கியபின் 
ஆன வழி பாட்டு அர்ச்சனைக்கு 
    நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச 
ஞான அரசும் புக்கு இறைஞ்சி 
    நாதர் முன்பு போற்றுவார். | 
299 | 
1570 
தலையின் மயிரைப் பறித்து உண்ணூம் 
    சாதி அமணர் மறைத்தாலும் 
நிலை இலாதார் நிலைமையினால் 
    மறைக்க ஒண்ணுமோ என்னும் 
விலை இல் வாய்மைக்குறும் தொகைகள் 
    விளம்பிப் புறம் போந்து அங்கு அமர்ந்தே 
இலை கொள் சூலப் படையார் சேர் 
    இடங்கள் பிறவும் தொழ அணைவார். | 
300 | 
1571 
பொங்கு புனலார் பொன்னியில் 
    இரண்டு கரையும் பொருவிடையார் 
தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சித் 
    தமிழ் மாலைகளும் சாத்திப் போய் 
எங்கும் நிறைந்த புகழ் ஆளர் ஈறில் 
    தொண்டர் எதிர் கொள்ளச் 
செங்கண் விடையார் திருவானைக் 
    காவின் மருங்கு சென்று அணைந்தார். | 
301 | 
1572 
சிலந்திக்கு அருளும் கழல் வணங்கிச் 
    செஞ்சொல் மாலை பல பாடி 
இலங்கு சடையார் எறும்பியூர் 
    மலையும் இறைஞ்சி பாடியபின் 
சோதித் திருச்சிராப்பள்ளி 
    மலையும் கற்குடியும் 
நலம் கொள் செல்வத் திருப்பராய்த் 
    துறையும் தொழுவான் நண்ணினார். | 
302 | 
1573 
மற்றப் பதிகள் முதலான 
    மருங்கு உள்ளனவும் கை தொழுது 
பொன் புற்று அமைந்த திருப்பணிகள் 
    செய்து பதிகம் கொடு போற்றி 
உற்ற அருளால் காவிரியை 
    ஏறி ஒன்னார் புரம் எரியச் 
செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீலியினைச் 
    சென்று சேர்கின்றார். | 
303 | 
1574 
வழி போம் பொழுது மிக இளைத்து 
    வருத்தம் உற நீர் வேட்கையொடும் 
அழிவாம் பசி வந்து அணைந்திடவும் 
    அதற்குச் சித்தம் அலையாதே 
மொழி வேந்தரும் முன் எழுந்து 
    அருள முருகு ஆர் சோலைப் பைஞ்ஞீலி 
விழி ஏந்திய நெற்றியினார் தம் 
    தொண்டர் வருத்தம் மீட்பாராய். | 
304 | 
1575 
காவும் குளமும் முன் சமைத்துக் 
    காட்டி வழி போம் கருத்தினால் 
மேவும் திருநீற்று அந்தணராய் 
    விரும்பும் பொதி சோறும் கொண்டு 
நாவின் தனி மன்னவர்க்கு எதிரே 
    நண்ணி இருந்தார் விண்ணின் மேல் 
தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி 
    ஏனமும் காண்பு அரியவர் தாம். | 
305 | 
1576 
அங்கண் இருந்த மறையவர் பால் 
    ஆண்ட அரசும் எழுந்து அருள 
வெங்கண் விடை வேதியர் நோக்கி 
    மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர் 
இங்கு என் பாலே பொதி சோறு 
    உண்டு இதனை உண்டு தண்ணீர் இப் 
பொங்கு குளத்தில் குடித்து இளைப்புப் 
    போக்கிப் போவீர் எனப் புகன்றார். | 
306 | 
1577 
நண்ணும் திருநாவுக்கு அரசர் நம்பர் 
    அருள் என்று அறிந்தார் போல் 
உண்ணும் என்று திருமறையோர் 
    உரைத்துப் பொதி சோறு அளித்தலுமே 
எண்ண நினையாது எதிர் வாங்கி 
    இனிதாம் அமுது செய்து இனிய 
தண்ணீர் அமுது செய்து அருளித் 
    தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார். | 
307 | 
1578 
எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி 
    இருந்த மறையவனார் 
அப்பால் எங்கு நீர் போவது என்றார் 
    அரசும் அவர்க்கு எதிரே 
செப்புவார் யான் திருப்பைஞ் 
    ஞீலிக்குப் போவ என்று உரைப்ப 
ஒப்பு இலாரும் யான் அங்குப் 
    போகின்றேன் என்று உடன் போந்தார். | 
308 | 
1579 
கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிட 
வேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மைத் தவத்து மேலவர் தாம் 
ஆடல் புரிந்தார் அடியேனைப் பொருளாய் அளித்த கருணை எனப் 
பாடல் புரிந்து விழுந்து எழுந்து கண்ணீர் மாரிபயில் வித்தார். | 
309 | 
1580 
பைஞ் ஞீலியினில் அமர்ந்து அருளும் பரமர் கோயில் சென்று எய்தி 
மைஞ் ஞீலத்து மணி கண்டர் தம்மை வணங்கி மகிழ் சிறந்து 
மெய்ஞ் ஞீலிர் மையினில் அன்புருக விரும்பும் தமிழ் மாலைகள் பாடிக் 
கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார். | 
310 | 
1581 
நாதர் மருவும் திருமலைகள் நாடும் பதிகள் பல மிகவும் 
காதல் கூரச் சென்று இறைஞ்சிக் கலந்த இசை வண் தமிழ் பாடி 
மாதோர் பாகர் அருளாலே வடபால் நோக்கி வாகீசர் 
ஆதி தேவர் அமர்ந்த திரு அண்ணாமலையை நண்ணினார். | 
311 | 
1582 
செங்கண் விடையார் திரு அண்ணா மலையைத் தொழுது வலம் கொண்டு 
துங்க வரையின் மிசை ஏறி தொண்டர் தொழும்புக்கு எதிர் நிற்கும் 
அங்கண் அரசைத் தொழுது எழுந்து திளைத்துத் திருநாவுக்கரசர் 
தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார். | 
312 | 
1583 
அண்ணாமலை மலை மேல் அணிமலையை ஆரா அன்பின் அடியவர் தம் 
கண்ணார் அமுதை விண்ணோரைக் காக்கக் கடலில் வந்து எழுந்த 
உண்ணா நஞ்சம் உண்டானைக் கும்பிட்டு உருகும் சிந்தை உடன் 
பண்ணார் பதிகத் தமிழ் பாடிப் பணிந்து பரவிப் பணி செய்தார். | 
313 | 
1584 
பணியார் வேணிச் சிவ பெருமான் பாதம் போற்றிப் பணி செயும் நாள் 
மணியார் கண்டத்து எம் பெருமான் மண் மேல் மகிழும் இடம் எங்கும் 
தணியாக் காதலுடன் சென்று வணங்கித் தக்க பணி செய்வார் 
அணியார் தொண்டைத் திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார். | 
314 | 
1585 
காதல் செய்யும் கருத்தின் உடன் காடும் மலையும் கான் ஆறும் 
சூதமலி தண் பணைப் பதிகன் பலவும் கடந்து சொல்லிக்கு 
நாதர் போந்து பெரும் தொண்டை நன்னாடு எய்தி முன் ஆகச் 
சீத மலர் மென் சோலை சூழ் திரு ஒத்தூரில் சென்று அடைந்தார். | 
315 | 
1586 
செக்கர் சடையார் திரு ஒத்துத்தூர் தேவர் பிரானார் தம் கோயில் 
புக்கு வலம் கொண்டு எதிர் இறைஞ்சிப் போற்றிக் கண்கள் புனல் பொழிய 
முக் கண் பிரானை விரும்பும் மொழித் திருத் தாண்டகங்கள் முதலாகத் 
தக்க மொழி மாலைகள் சாத்திச் சார்ந்து பணி செய்து ஒழுகுவார். | 
316 | 
1587 
செய்ய ஐயர் திரு ஒத்தூர் ஏத்திப் போந்து செழும் புவனம் 
உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கித் 
தையல் தழுவக் குழைந்த பிரான் தங்கும் தெய்வப் பதி என்று 
வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தா. | 
317 | 
1588 
ஞாலம் உய்யத் திருவதிகை நம்பர் தம் பேர் அருளினால் 
சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்று 
காலை மலரும் கமலம் போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம் 
சால மலர்ந்து களி சிறப்பத் தழைத்த மனங்கள் தாங்குவார். | 
318 | 
1589 
மாட வீதி மருங்கு எல்லாம் மணி வாயில்களில் தோரணங்கள் 
நீடு கதலியுடன் கமுகு நிறைத்து நிறை பொற்குடம் தீபம் 
தோடு குலவு மலர் மாலை சூழ்ந்த வாசப் பந்தர்களும் 
ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணிந்£ள் காஞ்சி அலங்கரித்தார். | 
319 | 
1590 
தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு அரசர் பால் 
கொண்ட வேடப் பொலிவினொடும் குலவும் வீதி பணி செய்யும் 
அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி 
இண்டை புனைந்த சடை முடியார்க்கு அன்பர் தம்மை எதிர் கொண்டார். | 
320 | 
1591 
எதிர் கொண்டு இறைஞ்சும் சீர் அடியார் தம்மை இறைஞ்சி எழுந்து அருளி 
மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வானநதி 
குதி கொண்டு இழிந்த சடைக் கம்பர் செம் பொன் கோயில் குறுகினார் 
அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர். | 
321 | 
1592 
திரு வாயிலினைப் பணிந்து எழுந்து செல்வத் திரு முன்றிலை அணைந்து 
கருவார் கச்சி ஏகம்பர் கனக மணி மாளிகை சூழ்ந்து 
வருவார் செம் பொன் மலை வல்லி தழுவக் குழைந்த மணி மேனிப் 
பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சிப் பேரா அன்பு பெருக்கினார். | 
322 | 
1593 
வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க் கால் தோறும் வரும் புளகம் 
ஆர்ந்த மேனிப் புறம்பு அலைப்ப அன்பு கரைந்து புள் அலைப்பச் 
சேர்ந்த நயனப் பயன் பெற்றுத் திளைப்பத் திருவேகம்பர் தமை 
நேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார். | 
323 | 
1594 
கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்துப் 
பரவாய சொல் மாலைத் திருப் பதிகம் பாடிய பின் 
விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின் 
அரவு ஆரம் புனைந்தவர் தம் திருமுன்றில் புறத்து அணைந்தார். | 
324 | 
1595 
கையார்ந்த திருத்தொண்டு கழிய மிகும் காதலோடும் 
செய்யா நின்றே எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடி 
மையார்ந்த மிடற்றர் திரு மயானத்தை வலம் கொண்டு 
மெய்யார்வம் உறத் தொழுது விருப்பினோடு மேவு நாள். | 
325 | 
1596 
சீர் வளரும் மதில் கச்சி நகர்த் திரு மேல் தளி முதலாம் 
நீர் வளரும் சடையவர் தாம் நிலவி உறை ஆலயங்கள் 
ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ்ச் சொல் மலரால் 
சார்வுறு மாலைகள் சாத்தித் தகும் தொண்டு செய்திருந்தார். | 
326 | 
1597 
அந்நகரில் அவ் வண்ணம் அமர்ந்து உறையும் நாளின் கண் 
மன்னு திரு மாற் பேறு வந்து அணைந்து தமிழ் பாடிச் 
சென்னி மிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சித் 
துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்த பெரும் காதலினால். | 
327 | 
1598 
ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் எனப் போற்றிப் 
பாகம் பெண் உருவானைப் பைங் கண் விடை உயர்த்தானை 
நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திரு நீற்றின் 
ஆகந்தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார். | 
328 | 
1599 
திருக்கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தித் திங்களார் 
நெருக்கச் செஞ்சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார் 
வருக்கைச் செஞ்சுளை பொழி தேன் வயல் விளைக்கும் நாட்டு இடை போய்ப் 
பருக்கைத் திண் களிற்று உரியார் கழுக் குன்றின் பாங்கு அணைந்தார். | 
329 | 
1600 
நீடு திருக் கழுக் குன்றில் நிருத்தனார் கழல் வணங்கிப் 
பாடு தமிழ்த் தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும் 
சூடும் இனம் பிறை முடியார் தமைத் தொழுது போற்றிப் போய் 
மாடு பெரும் கடல் உடுத்த வான்மியூர் மருங்கு அணைந்தார். | 
330 | 
1601 
திருவான்மியூர் மருந்தைச் சேர்ந்து பணிந்த அன்பினொடும் 
பெரு வாய்மைத் தமிழ்பாடி அம் மருங்கு பிறப்பு அறுத்துத் 
தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சித் தமிழ் வேந்தர் 
மருவாரும் மலர்ச் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார். | 
331 | 
1602 
வரை வளர் மா மயில் என்ன மாடமிசை மஞ்சாடும் 
தரை வளர் சீர்த் திருமயிலைச் சங்கரனார் தாள் வணங்கி 
உரை வளர் மாலைகள் அணிவித்து உழவாரப் படை ஆளி 
திரை வளர் வேலைக் கரை போய் திரு ஒற்றியூர் சேர்ந்தார். | 
332 | 
1603 
ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி 
நற்கொடி மாலைகள் பூகம் நறும் கதலி நிரை நாட்டிப் 
பொற்குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்து 
மற்றவரை எதிர் கொண்டு கொடு புக்கார் வழித் தொண்டர். | 
333 | 
1604 
திரு நாவுக் கரசரும் அத் திரு ஒற்றியூர் அமர்ந்த 
பெரு நாகத்தின் சிலையார் கோபுரத்தை இறைஞ்சிப் புக்கு 
ஒரு ஞானத் தொண்டர் உடன் உருகி வலம் கொண்டு அடியார் 
கரு நாமம் தவிர்ப்பாரைக் கை தொழுது முன் வீழ்ந்தார். | 
334 | 
1605 
எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானைத் 
தொழுத ஆர்வம் உற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எல்லாம் 
முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க 
விழுதாரை கண் பொழிய விதிர்ப்பு உற்று விம்மினார். | 
335 | 
1606 
வண்டு ஓங்கும் செங் கமலம் என எடுத்து மனம் உருகப் 
பண் தோய்ந்த சொல் திருத் தாண்டகம் பாடிப் பரவுவார் 
விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம் 
கண்டு ஓங்கு களிச் சிறப்பக் கை தொழுது புறத்து அணைந்தார். | 
336 | 
1607 
விளங்கு பெருந் திருமுன்றில் மேவும் திருப்பணி செய்தே 
உளங்கொள் திரு விருத்தங்கள் ஓங்கு திருக் குறுந் தொகைகள் 
களங்கொள் திரு நேரிசைகள் பல பாடிக் கை தொழுது 
வளங்கொள் திருப் பதியம் தனில் பல நாள்கள் வைகினார். | 
337 | 
1608 
அங்குறையும் நாளின்கண் அருகுளவாம் சிவாலயங்கள் 
எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால் 
பொங்கு புனல் திரு ஒற்றியூர் தொழுது போந்து உமையாள் 
பங்குடையார் அமர்ந்திருப் பாசூராம் பதி அணைந்தார். | 
338 | 
1609 
திருப்பாசூர் நகர் எய்திச் சிந்தையினில் வந்து ஊறும் 
விருப்பு ஆர்வம் மேற் கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய 
இருப்பாரைப் புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனிப் 
பொருப்பார் வெஞ்சிலையாரைத் தொழுது எழுந்து போற்றுவார். | 
339 | 
1610 
முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்துச் 
சிந்தை கரைந்து உருகு திருக் குறுந் தொகையும் தாண்டகமும் 
சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி 
எந்தையார் திரு அருள் பெற்று ஏகுவார் வாகீசர். | 
340 | 
1611 
அம் மலர்ச் சீர்ப் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின் 
மைம் மலரும் களத்தாரை வணங்கி மகிழ்வொடும் போற்றி 
மெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழுக் குடிமைச் 
செம்மையினால் பழையனூர்த் திரு ஆல வனம் பணிந்தார். | 
341 | 
1612 
திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாம் எனச் சிறப்பின் 
ஒருவாத பெரும் திருத் தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ்ப் 
பெரு வாய்மைத் தொடை மாலை பல பாடிப் பிற பதியும் 
மருஆர்வம் பெற வணங்கி வடதிசை மேல் வழிக் கொள்வார். | 
342 | 
1613 
பல் பதியும் நெடும் கிரியும் படர் வனமும் சென்று அடைவார் 
செல் கதி முன் அளிப்பார் தம் திருக்காரிக் கரை பணிந்து 
தொல் கலையின் பெருவேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம் 
மல்கு திருக் காளத்தி மா மலை வந்து எய்தினார். | 
343 | 
1614 
பொன் முகலித் திருநதியின் புனித நெடும் தீர்த்தத்தில் 
முன் முழுகிக் காளத்தி மொய் வரையின் தாழ்வரையில் 
சென்னி உறப் பணிந்து எழுந்து செம் கண் விடைத் தனிப்பாகர் 
மன்னும் மலை மிசை ஏறி வலம் கொண்டு வணங்குவார். | 
344 | 
1615 
காதணி வெண் குழையானைக் காளத்தி மலைக் கொழுந்தை 
வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும் 
காதல் புரி மனம் களிப்பக் கண் களிப்பப் பரவசமாய் 
நாதனை என்கண்ணுளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார். | 
345 | 
1616 
மலைச் சிகரச் சிகா மணியின் மருங்கு உற முன்னே நிற்கும் 
சிலைத் தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்து இறைஞ்சி 
அலைத்து விழும் கண் அருவி ஆகத்துப் பாய்ந்து இழியத் 
தலைக் குவித்த கையினராய்த் தாழ்ந்து புறம் போந்து அணைந்தார். | 
346 | 
1617 
சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்து 
தாணுவினை அம்மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால் 
பேணிதிருக் கயிலை மலை வீற்று இருந்த பெருங் கோலம் 
காணுமது காதலித்தார் கலை வாய்மைக் காவலனார். | 
347 | 
1618 
அங்கண் மா மலைமேல் மருந்தை வணங்கியார் அருளால் மிகப் 
பொங்கு காதலின் உத்தரத் திசை மேல் விருப்போடு போதுவார் 
துங்க மால் வரை கானியாறு தொடர்ந்த நாடு கடந்தபின் 
செங்கண் மால் விடை அண்ணல் மேவும் திருப் பருப்பதம் எய்தினார். | 
348 | 
1619 
மான விஞ்சையர் வான நாடர்கள் வான் இயக்கர்கள் சித்தர்கள் 
கான கின்னரர் பன்னகாதிபர் காம சாரிகளே முதல் 
ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும் 
தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார். | 
349 | 
1620 
அம் மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படைச் 
செம்மல் வெண் கயிலைப் பொருப்பை நினைந்து எழுந்த ஓர் சிந்தையால் 
எம் மருங்கும் ஓர் காதல் இன்றி இரண்டு பாலும் வியந்து உளோர் 
கைம் மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார். | 
350 | 
1621 
கரு நடம் கழிவாக ஏகிய பின் கலந்த வனங்களும் 
திரு நதித் துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும் 
பெரு நலம் கிளர் நாடும் எண்ணில பின்படப் பொற்பினால் 
வரு நெடும் கதிர் கோலு சோலைய மாளவத்தினை நண்ணினார். | 
351 | 
1622 
அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து சென்று 
எங்கும் மிக்க அறங்கள் நீடும் இலாட பூமி இகந்து போய் 
மங்குல் சுற்றிய வெற்பினோடு வனங்கள் ஆறு கடந்து அயல் 
பங்கயப் பழனத்து மத்திய பை திரத்தினை எய்தினார். | 
352 | 
1623 
அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம் கொளும் 
மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன் 
பின் அணைந்தவர் தம்மை அங்கண் ஒழிந்து கங்கை கடந்து போய் 
மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கற்சுரம் முந்தினார். | 
353 | 
1624 
மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால் 
போகலா நெறி அன்றியும் புரிகின்ற காதல் பொலிந்து எழச் 
சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்த்து தனித்து நேர் 
ஏகினார் இரவும் பெரும் கயிலைக் குலக்கிரி எய்துவார். | 
354 | 
1625 
ஆயவார் இருளின் கண் ஏகும் அவ் அன்பர் தம்மை அணைந்து முன் 
தீயவாய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சுகால் 
வாய நாக மணிப் பணங் கொள் விளக்கு எடுத்தன வந்து 
தோய வானவராயினும் தனி துன் அருஞ்சுரம் முன்னினார். | 
355 | 
1626 
வெங்கதிர்ப் பகல் அக்கடத்து இடை வெய்யவன் கதிர் கை பரந்து 
எங்கும் மிக்க பிளப்பில் நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றன 
பொங்கழற்று எறு பாலை வெந்நிழல் புக்க சூழல் புகும் பகல் 
செங்கதிர்க் கனல் போலும் அத்திசை திண்மை மெய்த்தவர் நண்ணினார். | 
356 | 
1627 
இங்ஙனம் இரவும் பகற் பொழுதும் அரும் சுரம் எய்துவார் 
பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசைத் தசை தேயவும் 
மங்கை பங்கர் தம் வெள்ளிமால் வரை வைத்த சிந்தை மறப்பரோ 
தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார். | 
357 | 
1628 
கைகளும் மணி பந்து அசைந்துறவே கரைந்து சிதைந்தபின் 
மெய் கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட 
மொய் கடுங் கனல் வெம்பரல் புகை மூளும் அத்த முயங்கியே 
மை கொள் கண்டர் தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால். | 
358 | 
1629 
மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திட 
நேர் வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடு நீடு 
ஆர்வம் அங்கு உயிர் கொண்டு ஊகைக்கும் உடம்பு அடங்கம் ஊன் கெடச் 
சேர் வரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர். | 
359 | 
1630 
அப்புறம் புரள்கின்ற நீள் இடை அங்கம் எங்கும் அரைந்திடச் 
செப்ப அரும் கயிலைச் சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால் 
மெய்ப் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும் 
தப்புறச் செயல் இன்றி அந்நெறி தங்கினார் தமிழ் ஆளியார். | 
360 | 
1631 
அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார் 
மன்னும் தீந்தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த 
நன்னெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார் 
பன்னகம் புனை பரமர் ஓர் முனிவராம் படியால். | 
361 | 
1632 
வந்து மற்றவர் மருங்குற அணைந்து நேர் நின்று 
நொந்து நோக்கி மற்றவர் எதிர் நோக்கிட நுவல்வார் 
சிந்தி இவ் உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால் 
இந்த வெங்கடத்து எய்தியது என் என இசைத்தார். | 
362 | 
1633 
மாசில் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும் 
தேசுடைச் சடை மவுலியும் நீறும் மெய் திகழ 
ஆசில் மெய்த்தவர் ஆகி நின்றவர் தமை நோக்கிப் 
பேச உற்றதோர் உணர்வு உற விளம்புவார் பெரியோர். | 
363 | 
1634 
வண்டுலாங் குழல் மலை மகளுடன் வட கயிலை 
அண்டர் நாயகர் இருக்கும் அப் பரிசு அவர் அடியேன் 
கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன் 
கொண்ட என் குறிப்பு இது முனியே எனக் கூற. | 
364 | 
1635 
கயிலை மால் வரை யாவது காசினி மருங்கு 
பயிலும் மானுடப் பான்மையோர் அடைவதற்கு எளிதோ 
அயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிதால் 
வெயில் கொள் வெஞ்சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி. | 
365 | 
1636 
மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன் என விளங்கும் 
தோளும் ஆகமும் துவளும் முந்நூல் முனி சொல்ல 
ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால் 
மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார். | 
366 | 
1637 
ஆங்கு மற்றவர் துணிவு அறிந்தவர் தமை அறிய 
நீங்கு மாதவர் விசும்பு இடைக் கரந்து நீள் மொழியால் 
ஓங்கு நாவினுக்கு அரசனே எழுந்திர் என்று உரைப்பத் 
தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார். | 
367 | 
1638 
அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே 
விண்ணிலே மறைந்து அருள் புரி வேத நாயகனே 
கண்ணினால் திருக் கயிலையில் இருந்த நின் கோலம் 
நண்ணி நான் தொழ நயந்து அருள் புரி எனப் பணிந்தார். | 
368 | 
1639 
தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில் 
எழு பெரும் திருவாக்கினால் இறைவர் இப் பொய்கை 
முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அம் முறைமை 
பழுதில் சீர்த் திருவையாற்றில் காண் எனப் பணித்தார். | 
369 | 
1640 
ஏற்றினார் அருள் தலை மிசைக் கொண்டு எழுந்து இறைஞ்சி 
வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி 
ஆற்றல் பெற்ற அவ் அண்ணலார் அஞ்சு எழுத்து ஓதிப் 
பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால். | 
370 | 
1641 
ஆதி தேவர் தம் திரு அருள் பெருமை யார் அறிந்தார் 
போத மாதவர் பனிமலர்ப் பொய்கையில் மூழ்கி 
மாதோர் பாகனார் மகிழும் ஐ ஆற்றில் ஓர் வாவி 
மீது தோன்றி வந்து எழுந்தனர் உலகெலாம் வியப்ப. | 
371 | 
1642 
வம்புலாம் மலர் வாவியின் கரையில் வந்து ஏறி 
உம்பர் நாயகர் திரு அருள் பெருமையை உணர்வார் 
எம் பிரான் தரும் கருணை கொல் இது என இரு கண் 
பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார். | 
372 | 
1643 
மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு 
உடைய நாயகர் சேவடி பணிய வந்து உறுவார் 
அடைய அப்பதி நிற்பவும் சரிப்பவும் ஆன 
புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார். | 
373 | 
1644 
பொன் மலைக் கொடியுடன் அமர்வெள்ளியம் பொருப்பில் 
தன்மை ஆம் படி சத்தியும் சிவமுமாம் சரிதைப் 
பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே 
மன்னும் மாதவர் தம்பிரான் கோயில் முன் வந்தார். | 
374 | 
1645 
காணும் அப்பெருங் கோயிலும் கயிலை மால் வரையாய்ப் 
பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெருந்தேவர் 
பூணும் அன்போடு போற்றி இசைத்து எழும் ஒலி பொங்கத் 
தாணு மா மறை யாவையும் தனித் தனி முழங்க. | 
375 | 
1646 
தேவர் தானவர் சித்தர் விச் சாதரர் இயக்கர் 
மேவு மாதவர் முனிவர்கள் புடையெலாம் மிடையக் 
காவி வாள் விழி அரம்பையர் கானமும் முழவும் 
தாவில் ஏழ் கடல் முழக்கினும் பெருகொலி தழைப்ப. | 
376 | 
1647 
கங்கையே முதல் தீர்த்தமாம் கடவுள் மா நதிகள் 
மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்க 
எங்கும் நீடிய பெரும் கண நாதர்கள் இறைஞ்சப் 
பொங்கியங்களால் பூத வேதாளங்கள் போற்ற. | 
377 | 
1648 
அந்தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர் 
சிந்தை செய்திடச் செங்கண் மால் விடை எதிர் நிற்ப 
முந்தை மாதவப் பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தே 
நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக. | 
378 | 
1649 
வெள்ளி வெற்பின் மேல் மரகதக் கொடி உடன் விளங்கும் 
தெள்ளு பேர் ஒளிப் பவள வெற்பு என இடப்பாகம் 
கொள்ளும் மா மலையாள் உடன் கூட வீற்று இருந்த 
வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார். | 
379 | 
1650 
கண்ட ஆனந்தக் கடவினைக் கண்களால் முகந்து 
கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய 
அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார் 
தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார். | 
380 | 
1651 
முன்பு கண்டு கொண்டு அருளினார் அமுது உண்ண மூவா 
அன்பு பெற்றவர் அளவு இலா ஆர்வம் முன் பொங்கப் 
பொன் பிறங்கிய சடையாரைப் போற்று தாண்டகங்கள் 
இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லையில் தவத்தோர். | 
381 | 
1652 
ஆயவாறு மற்று அவர் மனம் களிப்புறக் கயிலை 
மேய நாதர் தம் துணையொடும் வீற்று இருந்து அருளித் 
தூய தொண்டரும் தொழுது எதிர் நிற்க அக் கோலம் 
சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்தமை திகழ. | 
382 | 
1653 
ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடித் தொண்டர் 
மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்குச் 
செய்ய வேணியர் அருள் இதுவோ எனத் தெளிந்து 
வையம் உய்ந்திட கண்டமை பாடுவார் மகிழ்ந்து. | 
383 | 
1654 
மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் என்னும் 
கோதறு தண் தமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதிகங்கள் 
வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம் 
காதல் துணை ஒடும் கூடக் கண்டேன் எனப் பாடி நின்றார். | 
384 | 
1655 
கண்டு தொழுது வணங்கிக் கண் நுதலார் தமைப் போற்றிக் 
கொண்ட திருத் தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பின் 
மண்டு விருத்தங்கள் பாடி வணங்கித் திருத்தொண்டு செய்தே 
அண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கு அரசர். | 
385 | 
1656 
நீடிய அப்பதி நின்று நெய்த்தானமே முதலாக 
மாடுயர் தானம் பணிந்து மழபாடியாரை வணங்கிப் 
பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணி செய்து போற்றித் 
தேடிய மாலுக்கு அரியார் திருப் பூந் துருத்தியைச் சேர்ந்தார். | 
386 | 
1657 
சேர்ந்து விருப்பொடும் புக்குத் திரு நட மாளிகை முன்னர்ச் 
சார்ந்து வலம் கொண்டு இறைஞ்சித் தம் பெருமான் திரு முன்பு 
நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து ஒழியா அன்பு பொங்க 
ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர் உறும் தன்மையர் ஆனார். | 
387 | 
1658 
திருப்பூந் துருத்தி அமர்ந்த செஞ்சடையானை ஆன் ஏற்றுப் 
பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானைப் பொய்யிலியைக் கண்டேன் என்று 
விருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்ப 
இருப்போம் திருவடிக்கீழ் நாம் என்னும் குறுந் தொகை பாடி. | 
388 | 
1659 
அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று 
பொங்கு தமிழ்ச் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து 
தங்கித் திருத் தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்றுத் 
திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார். | 
389 | 
1660 
பல் வகைத் தாண்டகத் தோடும் பரவும் தனித் தாண்டகமும் 
அல்லல் அறுப்பவர் தானத்து அடைவும் திருத் தாண்டகமும் 
செல் கதி காட்டிடப் போற்றும் திரு அங்க மாலையும் உள்ளிட்டு 
எல்லையில் பன்மைத் தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார். | 
390 | 
1661 
பொன்னி வலம் கொண்ட திருப் பூந்துருத்தி அவர் இருப்பக் 
கல் மனத்து வல் அமணர் தமை வாதில் கட்டு அழித்துத் 
தென்னவன் கூன் நிமிர்த்தி அருளித் திரு நீற்றின் ஒளி கண்டு 
மன்னிய சீர் சண்பை நகர் மறையவனார் வருகின்றார். | 
391 | 
1662 
தீம் தமிழ் நாட்டு இடை நின்றும் எழுந்து அருளிச் செழும் பொன்னி 
வாய்ந்த வளம் தரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்கு 
வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர் பால் செல்வன் எனப் 
பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு அணையில் வந்து அணைந்தார். | 
392 | 
1663 
சண்பை வருந் தமிழ் விரகர் எழுந்தருளத் தாங்கேட்டு 
மண் பரவும் பெருங் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து 
கண் பெருகுங் களிகொள்ளக் கண்டு இறைஞ்சும் காதலினால் 
எண் பெருகும் விருப்பு எய்த எழுந்து அருளி எதிர் சென்றார். | 
393 | 
1664 
காழியர் கோன் வரும் எல்லை கலந்து எய்திக் காதலித்தார் 
சூழும் இடைந்திடு நெருக்கில் காணாமே தொழுது அருளி 
வாழி அவர் தமைத் தாங்கும் மணிமுத்தின் சிவிகையினைத் 
தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் எனத் தரித்தார். | 
394 | 
1665 
வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலி 
அந்தணனார் ஏறி எழுந்து அருளி வரும் மணி முத்தின் 
சந்த மணிச் சிவிகையினைத் தாங்குவார் உடன் தாங்கிச் 
சிந்தை களிப்புற வருவார் தமையாரும் தெளிந்து இலரால். | 
395 | 
1666 
திரு ஞான மாமுனிவர் அரசு இருந்த பூந் துருத்திக்கு 
அருகுகாக எழுந்து அருளி எங்கு உற்றார் அப்பர் என 
உருகா நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் 
பெரு வாழ்வு வந்து எய்தப் பெற்று இங்கு உற்றேன் என்றார். | 
396 | 
1667 
பிள்ளையார் அதுகேளாப் பெருகு விரைவு உடன் இழிந்தே 
உள்ளமிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்க 
வள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்கத் 
துள்ளு மான் மறிக் கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார். | 
397 | 
1668 
கழு மலக் கோன் திருநாவுக்கு அரசருடன் கலந்து அருளிச் 
செழு மதியம் தவழ் சோலைப் பூந்துருத்தித் திருப்பதியின் 
மழுவினொடு மான் ஏந்தும் திருக்கரத்தார் மலர்த் தாள்கள் 
தொழுது உருகி இன்புற்றுத் துதி செய்து அங்கு உடன் இருந்தார். | 
398 | 
1669 
வல் அமணர் தமை வாதில் வென்றதுவும் வழுதி பால் 
புல்லிய கூன் நிமிர்த்ததுவும் தண் பொருந்தப் புனல் நாட்டில் 
எல்லை இலாத் திரு நீறு வளர்த்து அதுவும் இருந் தவத்தோர் 
சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர். | 
399 | 
1670 
பண்புடைய பாண்டி மா தேவியார் தம் பரிவும் 
நண்புடைய குலச் சிறையார் பெருமையும் ஞானத் தலைவர் 
எண் பெருக உரைத்து அருள எல்லையில் சீர் வாகீசர் 
மண் குலவு தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார். | 
400 | 
1671 
பிரம புரத் திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில் 
அரன் உறையும் தானங்கள் அணைந்து இறைஞ்சிப் பாடுதற்கு அங்கு 
உரன் உடைய திரு நாவுக்கு அரசர் உரை செய்து அருளப் 
புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார். | 
401 | 
1672 
ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்றப் பதி நின்றும் 
பாண்டி நாட்டு எழுந்து அருளும் பான்மையராய்த் தென் திசை போய்க் 
காண் தகைய திருப் புத்தூர் பணிந்து ஏத்திக் கதிர் மதியம் 
தீண்டு கொடி மதில் மதுரைத் திரு ஆலவாய் சேர்ந்தார். | 
402 | 
1673 
சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல் சங்கத்துள் 
அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில் 
முன்றிலினை வலம் கொண்டு முன் இறைஞ்சி உள் புக்கு 
வன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார். | 
403 | 
1674 
எய்திய பேர் ஆனந்த இன்பத்தின் இடை அழுந்தி 
மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்துச் 
செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ் பாடிப் புறத்து அணைவார் 
கை தொழுது பணிந்து ஏத்தித் திரு உள்ளம் களி சிறந்தார். | 
404 | 
1675 
சீர் திகழும் பாண்டிமா தேவியார் திரு நீற்றின் 
சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனே 
பார் பரவும் குலச் சிறையார் வாகீசர் தமைப் பணி உற்று 
ஆரகிலாக் காதல் மிக அடி போற்ற அங்கு இருந்தார். | 
405 | 
1676 
திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சுடரைச் செழும் பொருள் நூல் 
தருவானை நேர் இசையும் தாண்டகமும் முதலான 
பெரு வாய்மைத் தமிழ் பாடிப் பேணு திருப்பணி செய்து 
மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார். | 
406 | 
1677 
கொடி மாடம் நிலவு திருப் பூவணத்துக் கோயிலின் உள் 
நெடியானுக்கு அறிய அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி 
வடிவேலு திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப் போய்ப் 
பொடி நீடு திருமேனிப் புனிதர் பதி பிற பணிவார். | 
407 | 
1678 
தென் இலங்கை இராவணன் தன் சிரம் ஈரைந்தும் துணித்த 
மன்னவன் ஆம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த 
பிஞ்ஞகரைத் தொழுவதற்கு நினைந்து போய்ப் பெரு மகிழ்ச்சி 
துன்னி மனம் கரைந்து உருகத் தொழுது எழுந்தார் சொல் அரசர். | 
408 | 
1679 
தேவர் தொழும் தனி முதலைத் திரு இராமேச்சுரத்து 
மேவிய சங்கரனை எதிர் நின்று விருப்புறு மொழியால் 
பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி 
நாவரசர் திருத் தொண்டு நலம் பெருகச் செய்து அமர்ந்தார். | 
409 | 
1680 
அங்குறைந்து கண் நுதலார் அடி சூடி அகன்று போய்ப் 
பொங்கு தமிழ்த் திரு நாட்டுப் புறம் பணை சூழ் நெல் வேலி 
செங்கண் விடையார் மன்னும் திருக் கானப் பேர் முதலாம் 
எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார். | 
410 | 
1681 
தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி 
வழுவில் திருப்பணி செய்து மனம் கசிவு உற்று எப் பொழுதும் 
ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள் 
தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார். | 
411 | 
1682 
தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சிப் 
பாம்பு அணிவார் தமைப் பணிவார் பொன்னி நாடது அணைந்து 
வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே 
பூம் புகலூர் வந்து அடைந்தார் பொய்ப் பாசம் போக்குவார். | 
412 | 
1683 
பொய்கை சூழ் பூம் புகலூர்ப் புனிதர் மலர்த் தாள் வணங்கி 
நையும் மனப் பரிவினோடும் நாள் தோறும் திரு முன்றில் 
கை கலந்த திருத் தொண்டு செய்து பெரும் காதல் உடன் 
வைகு நாள் எண் இறந்த வண் தமிழ் மாலைகள் மொழிவார். | 
413 | 
1684 
நின்ற திருத் தாண்டகமும் நீடு தனித் தாண்டகமும் 
மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத் தாண்டகமும் 
கொன்றை மலர்ச் சடையார் பால் குறைந்த திரு நேர் இசையும் 
துன்று தனி நேர் இசையும் முதலான தொடுத்து அமைத்தார். | 
414 | 
1685 
ஆருயிரின் திரு விருத்தம் தச புராணத்து அடைவும் 
பார் பரவும் பாவ நாசப் பதிகம் பன்முறையும் 
நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும் 
பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானைப் பாடினார். | 
415 | 
1686 
அந் நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர் 
நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில் 
தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும் 
பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள் செய்தார். | 
416 | 
1687 
செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கொவையும் 
உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க 
எம் பெருமான் வாகீசர் உழ வாரத்தினில் ஏந்தி 
வம்பலர் மென் பூங்கமல வாவியினில் புக எறிந்தார். | 
417 | 
1688 
புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும் 
சொல்லோடும் வேறு பாடு இலா நிலைமை துணிந்து இருந்த 
நல்லோர் முன் திருப் புகலூர் நாயகனார் திரு அருளால் 
வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார். | 
418 | 
1689 
வானகம் மின்னுக் கொடிகள் வந்து இழிந்தால் என வந்து 
தான நிறை சுருதிகளில் தகும் அலங்காரத் தன்மை 
கான அமுதம் பரக்கும் கனிவாயில் ஒளி பரப்பப் 
பானல் நெடுங் கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார். | 
419 | 
1690 
கற்பகப் பூந்தளிர் அடி போம் காமரு சாரிகை செய்ய 
உற்பலம் மென் முகிழ் விரல் வட்டு அணையோடும் கை பெயரப் 
பொற்புறும் அக் கையின் வழிப் பொரு கயல் கண் புடை பெயர 
அற்புத பொன் கொடி நுடங்கி ஆடுவபோல் ஆடுவார். | 
420 | 
1691 
ஆடுவார் பாடுவார் அலர் மாரி மேல் பொழிவார் 
கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்க 
ஓடுவார் மார வேளுடன் மீள்வார் ஒளி பெருக 
நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார். | 
421 | 
1692 
இத் தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய 
அத்தனார் திருவடிக் கீழ் நினைவு அகலா அன்பு உருகும் 
மெய்த் தன்மை உணர்வு உடைய விழுத் தவத்து மேலோர் தம் 
சித்த நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார். | 
422 | 
1693 
இம் மாயப் பவத் தொடக்காம் இருவினைகள் தமை நோக்கி 
உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர் 
அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன் மின் நீர் என்று 
பொய்ம் மாயப் பெருங் கடலுள் எனும் திருத் தாண்டகம் புகன்றார். | 
423 | 
1694 
மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வசக் 
காதலர் புரிந்து ஒழுகும் கை தவங்கள் செய்திடவும் 
பேதம் இலா ஓர் உணர்வில் பெரிய வரைப் பெயர்விக்க 
யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார். | 
424 | 
1695 
இந் நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த 
மன்னிய அன்பு உறு பத்தி வடிவு ஆன வாகீசர் 
மின் நிலவும் சடையார் தம் மெய் அருள் தான் எய்த வரும் 
அந்நிலைமை அணித்து ஆகச் சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார். | 
425 | 
1696 
மன்னிய அந்தக் கரணம் மருவுதலைப் பாட்டினால் 
தன்னுடைய சரண் ஆன தமியேனைப் புகலூரன் 
என்னை இனிச் சேவடிக்கீழ் இருத்திடும் என்று எழுகின்ற 
முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார். | 
426 | 
1697 
மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத் தாண்டகத்தைப் 
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் எனப் புகன்று 
நண்ணரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி 
அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார். | 
427 | 
1698 
வானவர்கள் மலர் மாரி மண் நிறைய விண் உலகின் 
மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல் 
யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி 
தான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில். | 
428 | 
1699 
அடியன் ஏன் ஆதரவால் ஆண்ட அரசின் சரிதப் 
படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அப் பர முனிவன் 
கடி மலர் மென் சேவடிகள் கை தொழுது குலச் சிறையார் 
முடிவில் புகழ்த் திருத் தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன். | 
429 | 
| திருச்சிற்றம்பலம் |